திருவேள்விக்குடி
பார்வதி சிவன் கல்யாணம் நடப்பதற்கு முன் செய்ய வேண்டிய திருமண சடங்குகள், கங்கண தாரணம், யாகம் வளர்த்து செய்ய வேண்டிய சம்பிரதாயங்கள் முதலியன இத்தலத்தில் தான் நடைபெற்றன. பிரம்மா தானே முன் நின்று திருமணத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். வேள்வி வளர்த்து யாகம் முதலிய ஏற்பாடுகள் நடைபெற்ற தலமாதலால் திருவேள்விக்குடி என்ற பெயர் ஏற்பட்டது.
இறைவர் திருப்பெயர்: ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பரிமள சுகந்த நாயகி
தல வரலாறு

ஒருமுறை உமாதேவி சிவனிடம் சற்று அலட்சியமாக நடக்க, அதனால் சிவபெருமான் சினங்கொண்டு உமாதேவியாரை பூவுலகில் பசுவாகி வாழக் கட்டளையிட்டார். பசு உருக்கொண்ட உமாதேவி தன் செயல் நினைத்து வருந்தி சிவனிடம் சாப விமோசனம் கேட்க, தக்க சமயம் வரும்போது தோன்றி மணம் செய்து கொள்வேன் என்று வரமளித்தார். உமாதேவியுடன் திருமகள், கலைமகள், இந்திராணி ஆகியோரும் பசு உருக்கொண்டு பூவுலகில் உலவி வந்தனர். திருமால் பசு மேய்ப்பவராக உருவெடுத்து அப்பசுக்களைப் பராமரித்து வந்தார். அம்பிகை உமாதேவி பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்ற சிவபெருமான் அம்பிகைக்கு சுய உருவம் கொடுத்தருளினார்.

சுய உருவம் பெற்ற அம்பிகை ஈசனை நினைத்து 16 திங்கட்கிழமை விரதம் இருந்து மணலால் லிங்கம் செய்து வைத்து பூஜை செய்து வர 17வது திங்கட்கிழமை சிவபெருமான் தோன்றி ஈஸ்வரியைத் திருமணம் செய்து கொண்டார் என்று தல புராணம் கூறுகிறது. பார்வதி சிவன் கல்யாணம் நடப்பதற்கு முன் செய்ய வேண்டிய திருமண சடங்குகள், கங்கண தாரணம், யாகம் வளர்த்துச் செய்ய வேண்டிய சம்பிரதாயங்கள் முதலியன இத்தலத்தில் தான் நடைபெற்றன. பிரம்மா தானே முன் நின்று திருமணத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். வேள்வி வளர்த்து யாகம் முதலிய ஏற்பாடுகள் நடைபெற்ற தலமாதலால் திருவேள்விக்குடி என்ற பெயர் ஏற்பட்டது.

அரசகுமாரன் ஒருவனுக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பின் பெண்ணின் பெற்றோர்கள் இறந்து விட அவளின் உறவினர்கள் இத்திருமணத்தை நிறுத்தி விட்டனர். அரசகுமாரன் எவ்வளவோ வேண்டியும் உறவினர்கள் சம்மதிக்கவில்லை. அரசகுமாரன் இத்தலம் வந்தான். நின்று போன தன் திருமணம் நடக்க வேண்டும் என்று இத்தல இறைவனை வேண்டினான். இறைவன் ஒரு பூதத்தை அனுப்பி அப்பெண்ணைக் கொண்டு வரச் செய்து அரசகுமாரனுக்கும் அப்பெண்ணிற்கும் திருமணம் செய்து வைத்தார் என்று தல வரலாறு கூறுகிறது.

மயிலாடுதுறை – கும்பகோணம் சாலை வழியில் உள்ள குத்தாலத்தில் இருந்து வடகிழக்கே 3 கி.மி. தொலைவில் திருவேள்விக்குடி சிவஸ்தலம் இருக்கிறது. குத்தாலத்தில் இருந்து திருவேள்விக்குடி செல்ல ஆட்டோ, வாடகைக் கார் வசதிகள் உண்டு.
அருள்மிகு ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில்
திருவேள்விக்குடி
குத்தாலம் அஞ்சல்
குத்தாலம்
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம்
PIN – 609801