டில்லி

மக்களின் கவனத்தை வெகுவாத தனது மாநிலங்களை உரையின் மூலம் ஈர்த்த காங்கிரஸ் மூத்த பெண் உறுப்பினர் விப்லவ் தாக்குர் குறித்த பல முக்கிய தகவல்கள்

சென்ற வியாழன் அன்று காங்கிரஸ் மூத்த பெண் உறுப்பினர் விப்லவ் தாக்குர் ஆற்றிய உரை மக்களை வெகுவாக ஈர்த்தது.   வட இந்தியாவில் புகழ் பெற்றிருந்த அவர் தமிழக மக்களையும் இதன் மூலம் கவர்ந்தார்,   தமிழ் மக்களிடையே அதிகம் புகழ் பெறாத அவரைக் குறித்து பலரும் அறிய முற்பட்டனர்.  அவரைப் பற்றிய விவரங்கள் இதோ

சுமார் 75 வயதாகும் விப்லவ் தாக்குர் இமாசலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் 1943 ஆம் வருடம் அக்டோபர் மாதம் பிறந்தார்.  இவருடைய தந்தை பரஸ்ராம் சுதந்திர போராட்ட வீரர் ஆவர்.  தாய் சர்லா சர்மா காங்கிரஸ் கட்சியில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.    விப்லவ் அரசியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

கடந்த 1961 ஆம் வருடம் தாக்குர் ஹர்னாம் சிங் என்பதரை விப்லவ் மணம் புரிந்தார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.  கடந்த 1985 ஆம் வருடம் முதல் இவர் காங்கிரசில் மாநில அளவிலும் மத்திய அளவிலும் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.   தற்போது மாநிலங்களவை உறுப்பினராக  உள்ள இவர் வியாழன் அன்று ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்களை இங்கு காண்போம்.

‘நீங்கள் அனைவரும் இங்கு அமர்ந்து உள்ளீர்கள் மற்றும் விமானத்தில் பயணிக்கிறீர்கள். இந்த வசதிகளை எல்லாம் யார் கொடுத்தது?   இங்குள்ள பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவற்றைக் கட்டியது மற்றும் ஐ.ஐ.டி-ஐ, ஐ.ஐ.எம்-ஐ உருவாக்கியது யார்? சென்ற ஆறு ஆண்டுகளாக நீங்கள் செய்தது என்ன? நீங்கள் இந்தியாவை உடைக்க, பிரிக்க முயன்றதைத் தவிர வேறு என்ன செய்தீர்கள்?

நான் உங்களிடம் துரோகி என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று கேட்க விரும்புகிறேன். துரோகி என்று யார் அழைக்கப்பட்டார்?   இந்தியச் சுதந்திரத்தை இடதுசாரிகள் ஒப்புக் கொள்ளாமல் இருந்த போது, அந்த கட்சி நான்கு ஆண்டுகள் தடை செய்யப்பட்டது. அப்போதும், அவர்களைத் துரோகி என்று நேரு அழைக்கவில்லை, இந்தியா எப்போதும் அவர்களைத் துரோகி என்று கூறவில்லை.

வாஜ்பாய் நேரு குறித்து இந்த நாடாளுமன்றத்தில் எதிர்த்துப் பேசி இருக்கிறார். ஆயினும், அவர் துரோகி என்று அழைக்கப்படவில்லை. இன்று இந்தியப் பிரதமர் குறித்து, இந்திய உள்துறை அமைச்சர் குறித்து அவர்கள் கொள்கைகள் குறித்து யார் எதிர்த்துப் பேசினாலும், அவர்கள் துரோகிகள் என்று முத்திரை குத்தப்படுத்தப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.  இந்த அரசு ஆறு வயது சிறுவர்களைக் கூட விடுவதில்லை.

கடந்த 70 ஆண்டுக்கால காங்கிரஸ் ஆட்சியில் கூட இத்தனை முறை பாகிஸ்தான் என்ற பெயர் உச்சரிக்கப்படவில்லை. ஆனால் நீங்கல் ஆறு ஆண்டுகளில் அத்தனை முறை உச்சரித்துவிட்டீர்கள். எந்த ஒரு அழைப்பும் இல்லாமல் பாகிஸ்தான் சென்றது யார்? நீங்கள்தானே… ஆனால் இப்போது பேசுகிறீர்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்குக் காஷ்மீர் குறித்துப் பேச, தீர்மானம் நிறைவேற்ற எந்த உரிமையும் இல்லை என்கிறீர்கள். அப்படி இருக்க நீங்கள் ஏன் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களை இங்கே அழைத்து வந்தீர்கள்?  அவர்களை ஏன் காஷ்மீர் அழைத்துச் சென்றீர்கள்?   அவர்களை நீங்கள் தான் அழைத்தீர்கள்.  , நம் நாடு குறித்து தவறாகப் பேச யாருக்கும் நாங்கள் ஆட்சியிலிருந்த போது தைரியம் வரவில்லை. ஆனால், இப்போது… ?  நீங்கள்தான் இதற்குக் காரணம்.

தயவு செய்து இந்த நாட்டை பிரிக்காதீர்கள். அப்படியே இந்த நாடு ஒற்றுமையாக இருக்கட்டும். என்றும்  நாம் மதச்சார்பற்றவர்கள் மற்றும் தர்மத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். நீங்கள்  ராமருக்குக் கோயில் கட்டுவது மட்டும் அன்றி அவரை பின்பற்றுவதும் முக்கியமாகும்… தனது ஆட்சியில்  ராமர் மக்களின் குரலுக்குச் செவிசாய்த்தார். இப்போது, நீங்கள் போராடும் மக்களின் குரலைக் கூட கேட்க மறுக்கிறீர்கள்.”

என அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்./