அஷ்ட நரசிம்மர் கோவில் – இறுதிப் பகுதி

தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்னும் பக்தனின் வாய்மொழிக்கு ஏற்ப தூணில் இருந்து வந்த கடவுள் நரசிம்மர்.   கோபத்துடன் இரணியனை வதம் செய்த நரசிம்மருக்கு எட்டு கோவில்கள் புகழ் வாய்த்தவையாக உள்ளன. அவற்றில் இன்று எட்டாம் கோவிலைப் பற்றிப் பார்ப்போம்.

அந்திலி

நரசிம்மர், தன் வாகனமான கருடனுக்குக் காட்சி தந்த திருத்தலம் இது. பிரகலாதனைக் காப்பாற்ற வேண்டிய அவசரத்தில் தன்னிடம் சொல்லாமல் பகவான் புறப்பட்டுச் சென்றதை அறிந்த கருடன், மிகுந்த வேதனை அடைந்தார். பகவானை தேடி பூலோகம் வந்து நிம்மதியின்றி தவித்தார்.

எங்குச் சென்றாலும் தன்மீது ஏறிச்செல்லும் பகவான், தன்னை மறந்துவிட்டுப் போனதை எண்ணி வருந்தியவர் இந்த தலம் இருக்கும் இடத்திற்கு வந்து தவம் இருந்தார். இதனால் அவர் உடல் இளைத்தது. அவரது உடலிலிருந்து வெளிப்பட்ட வெப்பம், கயிலாயம் வரை சென்று தாக்கியது. இதையடுத்து தேவர்கள், நாராயணரிடம் சென்று கருடனைக் காக்க வேண்டிப் பிரார்த்தித்தனர். கருடனிடம் முன்பாக சென்றார் நாராயணர். அப்போது தனக்கும் நரசிம்மராகக் காட்சியளிக்க வேண்டும் என்று கருடன் வேண்ட, அவ்வாறே காட்சியளித்தார்.

 திருக்கோவிலூரில் இருந்து முகையூர் வழியாக விழுப்புரம் செல்லும் சாலையில் அரகண்ட நல்லூரை அடுத்திருக்கிறது அந்திலி திருத்தலம்