தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்  சிதம்பரம், தில்லை

ஈசனின் திருப்பெயர்கள் :-
நடராஜர், ஆனந்த நடராஜர், அம்பல கூத்தர், சிற்றம்பலமுடையார், அம்பலவாணர், மூலட்டானேஸ்வரர், கூத்தபிரான், கனகசபாபதி, சபாநாயகர்.
அம்பாள் திருப்பெயர் :-
சிவகாமி, சிவகாம சுந்தரி.
ஸ்தல வரலாறு :-
கோயில் என்று பொதுவாக வழங்கினாலே சைவத்தில் சிதம்பரம் நடராஜப் பெருமானின் கோயிலைத்தான் குறிக்கும். ஊர்ப்பெயர் தில்லை. கோயிலின் பெயர் சிதம்பரம், இன்று ஊர்ப்பெயர் வழக்கில் மறைந்து, கோயிலின் பெயரே ஊர்ப் பெயராக வழங்கி வருகிறது.
தில்லை மரங்கள் அடர்ந்த காடாக இருந்தமையால் தில்லைவனம் என்று பெயர் பெற்றது. இம்மரங்கள் தற்போது சிதம்பரத்தில் இல்லை.
ஆனால் இதற்கு அண்மையிலுள்ள பிச்சாவரத்திற்குப் பக்கத்தில் உப்பங்கழியின் கரைகளில் காணப்படுகின்றன.
இக்கோயிலுள் திருமூலட்டானம் எனும் தனிக்கோயில் ஒன்றுள்ளது.
அர்தஜாம வழிபாடு முடிந்தபின் எல்லா கோயில்களிலும் உள்ள சிவகலைகள் அனைத்தும் இந்த மூலஸ்தான லிங்கத்தில் ஒடுங்குவதாக ஐதீகம்.
சிற்றம்பலம் உள்ளே செல்வதற்கு ஐந்துபடிகள், பஞ்சாக்ரப்படிகள் உள்ளன. இப்படிகளின் இரு புறமும் யானை உருவங்கள் உள்ளன.
பதினான்கு சாஸ்திரங்களில் ஒன்றை இப்படியில் வைத்தபோது, இப்படிகளிலுள்ள யானைகளில் ஒன்று தன் தும்பிக்கையால் அந்நூலையெடுத்து நடராஜப்பெருமான் திருவடியில் வைத்தமையால் அந்நூல், திருக்களிற்றுப்படியார், என்ற பெயர் பெற்றது.

திருமால், ப்ரம்மன், முதலியோர் இசைக்கருவிகளை ஒலிக்க, கூத்தபிரான் என்றும் திருநடனம் புரிகிறான். அம்மை சிவாகம சுந்தரி இத்திரு நடனத்தை இடைவிடாது ரசிக்கிறாள்.
சிறப்புகள் :-
இறைவன் – விராட்புருடனின் வடிவத்தில் திருவாரூர் மூலாதாரமாகவும், திருவானைக்கா உந்தியாகவும், திருவண்ணாமலை மணிப்பூரகமாகவும், திருக்காளத்தி, கழுத்தாகவும், காசி, புருவ மத்தியாகவும், சிதம்பரம் ஹ்ருதய ஸ்தானமாகவும் சொல்லப்படும்.
பஞ்சபூத ஸ்தலங்களுள் இது ஆகாய ஸ்தலம்.
பஞ்ச சபைகளுள் இது கனகசபை, பொற்சபை, சிற்சபை ஆகும்.
இக்கோயிலுள், இறைவனின் ஐந்து சபைகளாகியவை :-
1. சிற்றம்பலம்,
2. பொன்னம்பலம் (கனகசபை),
3. பேரம்பலம்,
4. நிருத்தசபை,
5. ராஜசபை என ஐந்து மன்றங்கள் உள்ளன.
“சிற்றம்பலம்” நடராஜப்பெருமான் திருநடனம் புரிந்தருளும் இடம் – ‘தப்ரசபா’ எனப்படும் இவ்வம்பலத்திற்கு முதலாம் ஆதித்தசோழனின் மகன் முதல் பராந்தகசோழன் பொன் வேய்ந்தான் என்று திருவாலங்காட்டு செப்பேடுகளும் ‘லெய்டன்’ நகரப் பெரிய செப்பேடுகளும் கூறுகின்றன. இவனுக்கு முன் ஹிரண்யவர்மன், பொன் வேய்ந்தான் என்று கோயில் புராணம் தெரிவிக்கின்றது.
“பொன்னம்பலம் (கனகசபை)” நடராஜப்பெருமான் அபிஷேகம் கொண்டருளும் இடம்.
இப்பொன்னம்பலத்தின் முகட்டை, முதலாம் ஆதித்தசோழன், கொங்குநாட்டிலிருந்து கொண்டுவந்த உயர்ந்த மாற்றுடைய பொன்னால் வேய்ந்தான் என்று சேக்கிழாரும், தில்லைக்கோயில் கல்வெட்டுப்பாடலொன்று சிறந்த சிவபக்தனும், படைத்தலைவனுமான மணவில் கூத்தனான காளிங்கராயன் என்பவன் பொன் வேய்ந்தான் என்றும் கூறுகின்றது.
“பேரம்பலம்”, இது தேவசபை எனப்படும்.
மணவில் கூத்தனான காளிங்கராயன் விக்ரமசோழன் காலத்தில் இச்சபையைச் செப்பினால் வேய்ந்தான் என்று தில்லைக்கோயில் பாடலால் அறிவதோடு, பின்பு இப்பேரம்பலத்திற்கு பொன் வேய்ந்தவன் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆவான் என்றும் அறிவோம்.
“ந்ருத்த சபை”, ஊர்த்வ தாண்டவம் செய்தருளிய இடம் இதுவே.
“ராஜ சபை”, இது ஆயிரக்கால் மண்டபமாகும். சோழ மன்னர் மரபில் முடிசூடப் பெறுபவர்களுக்கு இம்மண்டபத்தில் முடிசூட்டு விழா நடைபெற்று வந்தன.
வ்யாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்) மிகுதியான பற்றினால் பூஜித்த ஊராதலின் பெரும்பற்றப்புலியூர் என்றும், சித்+ அம்பரம் (அறிவு – வெட்டவெளி) = சிதம்பரம் ஞானகாசம் என்றும், பூலோக கைலாசம், பௌண்டரீகபுரம், சிதாகாசஸ்தலம் எனவும் இதற்குப் பலபெயர்களுண்டு.
வைஷ்ணவத்திலும் “திருச்சித்ரகூடம்” என்று புகழ்ந்தோதப்படும் திருப்பதி.
சந்தானாசாரியர்கள் முக்தி பெற்ற சிறப்புடையதுமாகிய பழம்பதி.
மாணிக்கவாசகர் சமணர்களை வாதில் வென்று ஊமைப் பெண்ணைப் பேசுவித்த பெரும்பதி.
திருஞானசம்பந்தர் தில்லைவாழ் அந்தணர்களை சிவகணங்களாக கண்டது இப்பதியில் தான்.
உமாபதிசிவம் ‘கொடிக்கவி’ பாடிக் கொடியேற வைத்த அதிசய ஸ்தலம்.
திருப்பல்லாண்டு பாடி, சேந்தனார் தடைப்பட்ட தேரை ஓடச்செய்த மந்த்ரஸ்தலம்.
ராஜராஜ சக்ரவர்த்தியின் வேண்டுதலின்பேரில் நம்பியாண்டார் நம்பிகளால் பொல்லாப்பிள்ளையாரின் துணை கொண்டு, திருமுறைகளை வெளிப்படுத்திய தெய்விகத் ஸ்தலம்.
சேக்கிழார் பெருமானுக்குத் திருத்தொண்டர் புராணம் பாட அடியெடுத்துத்தந்து, அரங்கேற்றம் செய்த  ஸ்தலம்.
நடராஜ சந்நிதிக்கான கொடிமரம் தங்கத்தகடு வேய்ந்ததாகும்.
சிற்றம்பலம் – சிற்சபை நடராஜப் பெருமானுக்குப் பக்கத்தில் “சிதம்பர ரஹஸ்யம்” உள்ளது.
அர்த ஜாம அழகர் :-
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில், சங்கூதிப் பிள்ளையாருக்கு வலது புறத்தில், அர்தஜாம அழகர், கோயில் கொண்டுள்ளார்.
இரவு பத்து மணி அளவில் நடந்தேறும் அர்தஜாம பூஜையில் ஸ்ரீ நடராஜர், பள்ளியறை தீபாராதனைகளைத் தொடர்ந்து, நிறைவாக அர்தஜாம அழகர் எனும் இத்திருக்கோலத்திற்கு மஹா தீபாராதனையோடு அன்றைய பூஜைகள் நிறைவுறும்.
அமர்ந்த வடிவில், தூக்கிய இடது கையும், வலது கையில் கதாயுதமும், பெயருக்கு ஏற்றார் போல் மிக அழகிய வடிவினராக அருள் பாலிக்கிறார்.