மத்திய பிரதேசத்தில்  கொரோனா தடுப்பு   அமைச்சர் யார் தெரியுமா?

மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து விட்டு, கடந்த மாதம் 23 ஆம் தேதி பா.ஜ.க.வின் சிவராஜ் சிங் சவுகான் முதல்-அமைச்சராகப் பதவி ஏற்றார்.

அமைச்சரவையை ஒரு மாதமாக விரிவாக்கம் செய்யாமல் இருந்த சவுகான், கடந்த 21 ஆம் தேதி 5 அமைச்சர்களை தனது ’கேபினெட்’டில் சேர்த்துக் கொண்டார்.

அவர்களில் ஒருவரான நரோட்டம் மிஸ்ரா என்பவருக்கு  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை மற்றும் சுகாதாரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த மாநிலத்தில் கொரோனா நோயைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ள மிஸ்ரா யார் தெரியுமா?

தேர்தல் ஆணையத்தால், பதவி நீக்கம் செய்யப்பட்டவர்.

காசு கொடுத்து, தனக்குச் சாதகமாகச் செய்திகளை ஊடகங்களில் வெளியிட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு உண்டு.

இந்த குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாகக் கண்டறிந்த தேர்தல் ஆணையம், மிஸ்ராவை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு தகுதி நீக்கம் செய்தது.

எனினும் டெல்லி உயர்நீதிமன்றம் சென்று ,தேர்தல் ஆணைய உத்தரவுக்கு இடைக்காலத் தடை வாங்கியுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு அந்த மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மிஸ்ரா  போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார்.

ஆனாலும் அவர் மீதான வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

– ஏழுமலை வெங்கடேசன்