சென்னை,

மிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பு காரணமாக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் களத்தில் குதித்தார்.  அவர் தொண்டர்களுடன் சேர்ந்து குப்பையை அகற்றினார்.

தமிழகத்தில் டெங்குவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் திமுக செயல்தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது தொகுதியான கொளத்தூர் தொகுதிக்கு டெங்கு விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டார்.

அப்போது, பெரம்பூர் அருகே உள்ள ரமணாநகரில் சாலையோரம் கிடந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தார். அவருடன் திமுக தொண்டர்களும் களத்தில் குதித்து, அந்த பகுதியை சுத்தமாக்கினர். குவியலாகச் சேர்க்கப்பட்ட குப்பைகள் பின்னர் ஜேசிபி மூலம் வாகனங்களில் ஏற்றப்பட்டு கும்பை கிடங்குக்கு அனுப்பப்பட்டது.  தொடர்ந்து தி.மு.க தொண்டர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதைத்தொடர்ந்த, செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “டெங்கு பரவல் தடுப்புப் பணிகளில் தி.மு.க-வினரும் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளேன். இந்தக் கொடுமை களுக்கு முக்கிய காரணம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறாமல் இருப்பதுதான்.

உள்ளாட்சித் தேர்தல் நடந்திருந்தால் ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருந்திருப்பார்கள். அவர்கள் இருக்கும்போது சுகாதார சீர்கெடுகளைக் களையும் பணியில் ஈடுபட்டிருப்பார்கள். அதன் காரணமாக டெங்கு காய்ச்சலும் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.

ஆனால், இந்த ஆட்சி குதிரை பேர ஆட்சியாக நடந்துகொண்டிருக்கிறது. இந்த டெங்கு ஆட்சி ஒழிய வேண்டும்.   மெஜாரிட்டி நிரூபிக்க முடியாத நிலையிலே குழப்பதிலே அவர்கள் இருக்கிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டுமென்று உயர் நீதிமன்றமே உத்தரவுபோட்டிருக்கிறது. அந்தத் தீர்ப்பைக்கூட மதிக்காமல் அதை எப்படி தள்ளிப்போடுவது என்பதில்தான் அவர்கள் முயலுகிறார்கள்.

சாலையோரங்களில் குப்பைகள் கொட்டுவதன் காரணமாக நோய்கள்  அதிகரித்து வருகிறது.  தறபோது ஏடிஸ் என்ற கொசுவால் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிவருகிறது. இதுவரை தமிழகம் முழுவதும் சுமார்  400-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் உயிரி ழந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், தமிழக அரசோ கடந்த 9-ம் தேதி வரை 40 பேர் மட்டுமே  பலியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

எடப்பாடி தலைமையில் இருக்கிற இந்த டெங்கு ஆட்சி ஒழிய வேண்டும். இந்த ஆட்சி ஒழிந்தால்தான் டெங்கு ஒழியும்” என்றார்.

ஆதாரம் கேட்பவர்கள், ஒவ்வொரு அரசு மருத்துவமனைக்கும் ஒவ்வோர் ஊருக்கும் வரச்சொல்லுங்கள். வந்து பார்க்கச் சொல்லுங்க. அப்போது ஆதாரத்தைக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.