டெல்லி:  தலைநகர் டெல்லி மாநில அரசின் தரத்தை குறைக்கும் வகையில்,  ‘Delhi Services Bill’  என்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நாள், மக்களாட்சியின் கறுப்பு நாள்’  என கடுமையாக விமர்சனம் செய்துள்ளதுடன், இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுகவையும் கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப் போலத் தரம் குறைக்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறிய நேற்றைய நாள், மக்களாட்சியின் கறுப்பு நாள்!

எதிர்க்கட்சி ஆட்சி செய்தால் அந்த மாநிலத்தைக் கூடச் சிதைப்போம் என்ற பாஜக-வின் பாசிசம் அரங்கேறிய நாளை வேறு என்ன சொல்வது?

29 வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு நாட்டின் தலைநகரையே தரைமட்டத்துக்குக் குறைத்த சதிச் செயலுக்கான தண்டனையை டெல்லி மாநில மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களும் விரைவில் தருவார்கள். மூன்று மாதமாக மணிப்பூர் எரிகிறது. அதை அணைக்க முடியாமல் , டெல்லியைச் சிதைக்கத் துடிக்கும் பா.ஜ.க.வின் தந்திரங்களை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில முதலமைச்சரின் அதிகாரத்தைக் குலைக்கும் இந்த மசோதாவை, பேரறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அடிமைக் கூட்டம் ஆதரித்து மாநிலங்களவையில் வாக்களித்திருப்பது எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை.

“நான் யாருக்கும் அடிமையில்லை” என்றபடியே, பா.ஜ.க.வின் பாதம் தாங்கி, “கொத்தடிமையாக” தரையில் ஊர்ந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி என்பதையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.”

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.