புதுடெல்லி: 
டெல்லி அரசு தனது இலவச ரேஷன் திட்டத்தை ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PM-GKAY) திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்கள் வழங்குவதை நீட்டிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு கூறிய ஒரு நாளே ஆகிய உள்ள நிலையில்  முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின்  இந்த அறிவிப்பு வந்துள்ளது.
மேலும், தொற்றுநோய் காரணமாகப் பணவீக்கம் மற்றும் வேலையின்மை ஆகியவற்றைக் காரணம் காட்டி, தேவைப்படும் மக்களுக்கு மேலும் ஆறு மாதங்களுக்குத் திட்டத்தை நீட்டிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி முதல்வர் கேட்டுக் கொண்டார்.
“டெல்லி அரசு தனது இலவச ரேஷன் திட்டத்தை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கிறது” என்று கெஜ்ரிவால் ஹிந்தியில் ஒரு டிவீட்டில் கூறினார். “பணவீக்கம் மிக அதிகமாகிவிட்டது. சாமானியர் கூட இரண்டு வேளை ரொட்டி சாப்பிடுவது கடினம். கொரோனாவால் பலர் வேலையில்லாமல் உள்ளனர். பிரதமர் அவர்களே, ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கும் திட்டத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கவும்” என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், உத்தரப்பிரதேசமும் அடுத்த ஆண்டு ஹோலி பண்டிகை வரை திட்டத்தை நீட்டித்துள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை (நவம்பர் 3) அறிவித்தார்.