டெல்லி: டெல்லியில் கொரோனா தொற்றில் இருந்து குணம் பெறுவோர்  விகிதம் 88% ஆக உயர்ந்துள்ளதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.
டெல்லி அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது: டெல்லியில் கொரோனா நிலவரத்தில் முன்னேற்றம் காணப்படுகிறது. இந்த வைரசை கட்டுப்படுத்திய டெல்லியின் மாதிரி திட்டம் நம் நாட்டிலும் உலகளவிலும் விவாதிக்கப்படுகிறது.
டெல்லியில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் சதவிகிதம் 88 ஆக உள்ளது. தற்போது 9 சதவீதத்தினர் மட்டுமே  கொரோனா தொற்றுடன் உள்ளனர். 2 முதல் 3 சதவிதம்  பேர்  கொரோனா பாதிப்பால் உயிரிழந்து உள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது.
முன்பு, கொரோனா பரிசோதிக்கப்பட்ட 100 பேரில் 35 பேருக்கு தொற்று இருந்தது. தற்போது 5 பேர் என்ற அளவில் உள்ளது. இது சாதகமான விகிதம். டெல்லியில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய தேவை ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.