டெல்லி: இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ள நிலையில் அந்த ஆக்கிரமிப்புக்கு துணைபோவது தேசவிரோதம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இது குறித்து டுவிட்டரில் வீடியோ மூலம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது என்று உண்மையை பேசுவதே தேசபக்தி.

நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதே ஓர் இந்தியனாக தலையாய பணி. நமது மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது தெளிவாக தெரிகிறது. இது தொடர்பாக செயற்கை கோள் புகைப்படங்களை பார்த்த பிறகும் முன்னாள் ராணுவ வீரர்களிடம் பேசிய பிறகும் நமது மண்ணை சீனா ஆக்கிரமிக்க வில்லை என்று எப்படி பொய் கூற முடியும்.
இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது. இந்த உண்மையை மறைத்து, ஆக்கிரமிப்புக்கு துணைபோவது தேசவிரோதம், இந்த விவகாரத்தில் தொடர்ந்து உண்மைகளை உரத்த குரலில் பேசுவேன் என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.