டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், திகார் சிறை அறை எண் 2-ல் அடைக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு 9  முறை அமலாக்கத்துறை  சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில் அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21 ம் தேதி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.  அவருடைய  அமலாக்கத்துறை காவல் ஏப்ரல் 1ந்தேதியுடன்  நிறைவடைந்ததையடுத்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  இதையடுத்து, அர்விந்த் கேஜ்ரிவாலை வருகிற 14-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து அர்விந்த் கேஜ்ரிவால்  திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் அறை 2 எண்  அறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளது.  கெஜ்ரிவாலுக்கு வீட்டில் சமைக்கப்பட்ட உணவு, சாக்லேட் மிட்டாய்கள் மற்றும்  பாட்டில் குடிநீர், தலையணை உள்ளிட்டவை வழங்கவும், கேஜ்ரிவால் தனது மனைவியை தினமும் சந்திக்கவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிறையில், 20 சானல்கள் தெரியும் வகையிலான தொலைக்காட்சி வைத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞரை சந்திக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும்,  அவர்  நீரிழிவு நோயாளி என்பதால், அவரது உடல் நிலையைக் கண்காணிக்க மருத்துவ உபகரணங்கள் வழங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுபோக, பகவத் கீதா, ராமாயணம் மற்றும் ஹவ் பிரைம் மினிஸ்டர் டிசைட்ஸ் ஆகிய நூல்களையும் அவர் எடுத்து செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.