சென்னை: தமிழக மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும்  ‘புதுமைப்பெண்’ திட்டத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அத்துடன்,  தகைசால் பள்ளிகள், மாதிரிப் பள்ளிகளை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்.

உயர்கல்வி படிப்புகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப் பெண்’ திட்டம் அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி படிப்புகளில் சேரும் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் முன்னிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொங்கி வைத்தார்.

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. சமீபத்தில் இத்திட்டம் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உதவித் திட்டமாக மாற்றப்பட்டது. இத்திட்டத்தின்படி, 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்காக ரூ.698 கோடியை ஒதுக்கியதுடன், வழிகாட்டுதல்களும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், பட்டம், பட்டயம், தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாணவிகளுக்கு மாதம் ரூ.1.000 அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இத்திட்டத்தில் பயனாளிகளாக சேர, பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்தும் மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் நடப்பு கல்வி ஆண்டில் 93 ஆயிரம் மாணவிகள் பயன்பெற இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இந்த திட்டங்களின் தொடக்க விழா இன்று  வடசென்னையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இதில்  ‘புதுமைப்பெண்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில்  டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.  அவர்,  23 தகைசால் பள்ளிகள், 15 மாதிரிப் பள்ளிகளை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

அப்போது, தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண் திட்டம் உயர்கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். பலர் வறுமையால் உயர்கல்வியை தொடர முடியாத நிலையில் உள்ளனர். நாட்டில் 27 கோடி பேர் பள்ளி செல்கின்றனர். அதில் 66% பேர் அரசுப்பள்ளி மாணவர்கள் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, கீதா ஜீவன், சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலர் இறையன்பு உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.