சென்னை: மும்பை அணிக்கு எதிரான போட்டியை, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, புள்ளிப் பட்டியலில் முன்னேறியது டெல்லி அணி.

டாஸ் வென்று, முதலில் பேட்டிங் தேர்வுசெய்த மும்பை அணி, 20 ஓவர்களில் 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனாலும், மும்பை அணி, குறைந்த ரன்களையே பாதுகாக்கும் வல்லமை கொண்டது என்பதால், வெற்றி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

ஷிகர் தவான், 42 பந்துகளில் 45 ரன்களை, அணியின் அதிகபட்ச ரன்களாக அடித்து அவுட்டாக, லலித் யாதவ், 25 பந்துகளில், 22 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். கேப்டன் ரிஷப் பன்ட் 7 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, லலித்திற்கு துணையாக நின்றவர் ஹெட்மேயர். அவர் 14 ரன்களை அடித்தார்.

இறுதியில், 19.1 ஓவர்களிலேயே, 4 விக்கெட்டுகளை இழந்து, 138 ரன்கள் சேர்த்து, 6 விக்கெட்டுகளில் மும்பையை சாய்த்தது டெல்லி அணி.

இந்த தொடரில், இதுவரை மும்பை ஆடிய 4 போட்டிகளிலும், அந்த அணியால் பெரிதாக ரன் குவிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 4 போட்டிகளிலுமே, அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணி இதுவரை அடித்துள்ள அதிகபட்ச ரன்களே 159தான் என்பதும் கவனிக்கத்தக்கது.