தலைநகர் டெல்லியில்  செயல்பட்டு வந்த பிரபல பாசுமதி அரிசி ஏற்றுமதியாளர் ராம் தேவ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் கடந்த வங்கிகளில் வாங்கிய சுமார் 400 கோடி கடன் தொகை திரும்பி செலுத்தாத நிலையில்  கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தலைமறைவாகி உள்ளதை  தற்போதுதான்   சிபிஐயிடம் எஸ்பிஐ வங்கி புகார் அளித்துள்ளது.
இந்நிறுவனம்,  எஸ்பிஐ வங்கியிடம் ரூ. 173.11 கோடி, கனரா வங்கியிடம் ரூ. 76.09 கோடி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியிடம் ரூ.64.31 கோடி , சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியிடம் ரூ. 51.31 கோடி , கார்ப்பரேஷன் வங்கியிடம் ரூ. 36.91 கோடி, ஐடிபிஐ வங்கியிடம் ரூ. 12.27 கோடியும் கடன் வாங்கியுள்ளதாகவும், மொத்தமாக ராம் தேவ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் ரூ. 414 கோடி கடன் வாங்கிவிட்டு தலைமறைவாகி உள்ளதாகவும் எஸ்பிஐ வங்கி தெரிவித்து உள்ளது.
இந்த நிறுவனத்தை எஸ்பிஐ வங்கி,  கடந்த 2016 ஆம் ஆண்டே   ‘நான் பெர்ஃபார்மிங் அசட்’ (non-performing asset) என்னும் வரையரைக்குள் கொண்டு வந்தது. ஆனால், 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான்,  ராம் தேவ் இன்டர்நேஷனல் லிமிடெட் குறித்துப்  சிபிஐயிடம் புகார் தெரிவித்துள்ளது.
இதையடுத்து,  கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி, அந்நிறுவனத்துக்கு எதிராக சிபிஐ அதிகாரப்பூர்வமாக வழக்குத் தொடர்ந்துள்ளது . ராம் தேவ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்களான நரேஷ் குமார், சுரேஷ் குமார், சங்கீதா மற்றும் பெயர் குறிப்பிடப்படாத பொது சேவை ஊழியர்களின் மேல் வழக்குத் தொடர்ந்துள்ளது. பணமோசடி, ஏமாற்றுதல், ஊழல் செய்தல் உள்ளிட்டப் பல பிரிவுகளுக்குக் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த முறைகேடு தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிர்வாகிகள், காவல்துறையினரின் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றும், அவர்கள் அப்போதே, வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.
இதுதொடர்பான ராம்தேவ் பாசுமதி நிறுவனத்துக்கு எதிராக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் அந்நிறுவனத்துக்கு எதிராக (NCLT) தொடரப்பட்ட வழக்கில், ராம் தேவ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர்கள் காணாமல் போனது சென்ற ஆண்டுதான் உறுதி செய்யப்பட்டது என்று எஸ்பிஐ தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தற்போதுதான் எஸ்பிஐ தரப்பில் இருந்து சிபிஐக்கு புகார் அளிக்கப்பட்டு உள்ளது.