சென்னை

ஜெயலலிதாவின் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத வழக்கில் அவரது அண்ணன் மக்கள் தீபக் மற்றும் தீபாவை சேர்க்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 2008-09 ஆம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்யவில்லை.   இதனால் வருமான வரித்துறை அவருக்கு நோட்டிஸ் அனுப்பியது.   இது குறித்து ஜெயலலிதா அளித்த விளக்கத்தை ஏற்ற வருமானவரித் தீர்ப்பாயம் அவரை குற்றச்சாட்டில் இருந்து விடுவித்தது.

வருமான வரித்துறையினர் இந்த தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.    இந்த வழக்கு மனு நீண்டகாலமாக நிலையில் உள்ளது.   இன்று இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது உயர்நீதிமன்றம், “ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அவரது அண்ணன் மகன் தீபக் மற்றும் அண்ணன் மகள் தீபா வாரிசுகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.  ஆகவே இந்த வழக்கில்  தீபக் மற்றும் தீபாவை சேர்க்க வேண்டும்” என உத்தரவு இட்டுள்ளது.