சென்னை:

செய்தியாளர்கள் முன்பே, தீபா, தன் கணவர் மாதவனை வீட்டுக்குள் நுழையக்கூடாது என்று அவமானப்படுத்தி விரட்டியடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, சமீபத்தில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை ஆரம்பித்தார். அப்போதிலிருந்தே அவருக்கும் அவரது கணவர்  மாதவனுக்கும் கருத்து வேறுபாடு தலை தூக்கியது.

 

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு தன்னுடைய சென்னை தி.நகர் இல்லத்தில் பேட்டி அளித்தார்.  ஆர்கே நகர் தேர்தல் ரத்தானது குறித்து  விரிவாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவருடைய கணவர் மாதவன், தீபாவின் வீட்டுக்கு வந்தார்.

உடனே தீபா, தன் அருகில் இருந்த சிலரிடம் மாதவனை வீட்டுக்குள் வரவேண்டாம் என்றும் வெளியே செல்லும்படியும் கூறி அனுப்பினார். அதனால் மாதவன் வீட்டுக்குள் செல்லாமல் செய்தியாளர்கள் அருகிலேயே நின்றுகொண்டிருந்தார்.

செய்தியாளர் கூட்டம் முடிந்ததும் வீட்டுக்குள் விறுவிறு என சென்ற தீபா,   மாதவன் வீட்டுக்குள் நுழைந்துவிடாதபடி  கதவுளைப் பூட்டினார். இது செய்தியாளர்கள் எதிரிலேயே நடந்தது.

சற்றும் தளராத மாதவன், சிறிது நேரம் வீட்டின் வெளியிலேயே காத்திருந்தார். பிறகு வேறு வழியின்றி தனது காரில் கிளம்பிவிட்டார்.

கணவன் மனைவிக்குள் பிரச்சினை இருக்கலாம். அதற்காக பிறர் முன் இப்படி அவமானப்படுத்தவேண்டுமா என்று செய்தியாளர்கள் வருத்தத்துடன் பேசியபடி கலைந்துசென்றனர்.