டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 97வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாள், நல்லாட்சி தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவரது சமாதியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்பட மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள், பாஜகவினர் என ஏராளமானோர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு சதைவ் அடல் என்ற இடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், நிர்மலா சீத்தாராமன் ஆகியோர் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு சதைவ் அடல் படத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமரான மறைந்த அடல் பிகாரி வாஜ்பாய் (Atal Bihari Vajpayee) 1924ம் ஆண்டு டிசம்பர் 25ந்தேதி பிறந்தார். இவர், 1996ம் ஆண்டு சில காலமும், 1998ல் இருந்து 2004 வரையிலும் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர். அவரது ஆட்சியை கொண்டாடும் வகையில், இன்றை நாள் நல்லாட்சி தினமாக கொண்டாடப்படுகிறது.

ஜனசங்கத்தலைவராக அரசியலில் இருந்து 1975 மிசா சட்டத்திற்கு எதிராக அனைத்து கட்சிகளும் 1977 தேர்தலுக்கு ஜனதா என்ற ஒரு குடையின் கீழ் வரும் போது ஜனதா கட்சியின் அங்கமானார், மொரார்ஜி தேசாய், சரண்சிங் இடையே பதவிக்கு போட்டி ஏற்பட்டபோது தனது ஜனசங்க உறுப்பினர்களுக்கு பதவி வேண்டாம் என்று விட்டுக்கொடுத்தவர்.

1980 தேர்தலில் முதல்முறையாக பாரதிய ஜனதா என்ற பெயரில் புதிய கட்சியை உருவாக்கி அந்த தேர்தலில் 2 இடங்கள் மட்டுமே பிடிக்க முடிந்தபின் 1996 தேர்தலில் அதிக இடங்களை பெற்றதால் 11 நாள் பிரதமர். பின் 1998 தேர்தலில் வென்று 11 மாதங்கள் பிரதமர்.இந்த நேரத்தில் தான் கார்கில் போர், போக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவை அணு ஆய்த நாடாக வெளியே காட்டியவர்.

1999 தேர்தலில் வென்று முழுமையாக 5 ஆண்டுகள் பதவியில் இருந்தார், இந்த காலத்தில் தான் தங்க நாற்கரச்சாலை மூலம் இந்தியா முழுவதும் இணைப்பு ஆரம்பமானது.  அப்துல்கலாமை  இந்தியாவின் குடியரசுத்தலைவராக்கியவர். அனைத்து மக்கள் மீதும் அன்பு கொண்ட பெருந்தகை யாளர்  அடல்பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாளில் அவரைப் போற்றுவோம்.