டில்லி,

நாடு முழுவதும்  கிராமப்புறங்களில் இயங்கி வரும் கூட்டுறவு வங்கிகள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வழங்கலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தும் பொருட்டு, பணமில்லா பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.

இதன் காரணமாக வங்கிகளில் இருந்து பணம் எடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், கிராமப்புறங்களில் உள்ள விவசாய வங்கிகள், கூட்டுறவு வங்கிகளிலும் உரிய விதிமுறைகளுடன் தங்களது வாடிக்கையாளர்களுக்கு டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வழங்க ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது.

இது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில் சட்ட வரையறைகளை உரிய முறையில் பின்பற்றி டெபிட், கிரெடிட் கார்டுகளை கூட்டுறவு வங்கிகள் வழங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் நடைபெறும் பணப்பறிமாற்றம் தொடர்பாக கூட்டுறவு வங்கிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்களையும் ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.