உச்ச நீதிமன்றத்தில் சமையல் கலைஞராகப் பணிபுரியும் அஜய் குமார் சமல் என்பவரின் மகள் பிரக்யா (25) அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் படிக்கத் தேவையான முழு கல்வி உதவித்தொகையை இரண்டு சிறந்த பல்கலைக்கழகங்களில் இருந்து பெற்றுள்ளார் .

கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் மிச்சிகன் பல்கலைக்கழகம் ஆகியவை அவருக்கு கல்வி உதவித்தொகை வழங்க முன்வந்துள்ளன.

இதுகுறித்து நீதிபதிகள் ஓய்வறையில் கூடியிருந்த நீதிபதிகள் கேள்விப்பட்டதை அடுத்து தங்களது அன்றாடப் பணிகளை தொடங்குவதற்கு முன்பு பிரக்யாவுக்கு கரகோஷம் எழுப்பி பாராட்டு தெரிவித்தனர்.

அவரது சாதனைக்காக பிரக்யாவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் பிற நீதிபதிகள் பாராட்டியுள்ளனர்.

அப்போது, “பிரக்யா தனது சொந்த உழைப்பால் இதைச் சாதித்துள்ளார் என்று நாங்கள் அறிவோம். இருந்தாலும் அவருக்குத் தேவைப்படும் எல்லாம் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம்… அவர் படிப்பை முடித்து மீண்டும் நாட்டுக்கு சேவை செய்ய வர வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.

நீதிபதிகள் கையெழுத்திட்ட அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான மூன்று புத்தகங்களை தலைமை நீதிபதி பிரக்யாவுக்கு பரிசாக வழங்கினார்.

மேலும், பிரக்யாவின் பெற்றோரையும் நீதிபதிகள் பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.