சென்னை: ஹெலிகாப்டர் விபத்தில், உயிரிழந்த ராணுவ அதிகாரிகளுடன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராணுவ தலைமை அதிகாரி பாராட்டு தெரிவித்து உள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னுார் மலை பகுதியில் டிசம்பர் 8ந்தேதி அன்று  முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் பயங்கர விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத், அவர் மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். விமானத்தின் குரூப் கேப்டன் வருண்சிங் என்பவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த விபத்துக்குறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனே குன்னூர் புறப்பட்டு சென்றதுடன், அங்கு ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.

இதற்கு நன்றி தெரிவித்து, தக்ஷின் பாரத் பகுதிக்கான ராணுவ தலைமை அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் அருண் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார்.   அதில், நீலகிரி மாவட்டத்தில் 8.12.2021 அன்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தினர் 13 பேர் உயிரிழந்த துயரமான நேரத்தில் அவர்கள் குடும்பத்தினருக்கு தாங்கள் அருகில் இருந்து ஆறுதல் அளித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றியையும், இதயபூர்வமான பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தகவல் அறிந்த உடனே- நெஞ்சை நெகிழ வைக்கும் வகையில் தாங்கள் விரைந்து வந்து, இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அவர்கள் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்து, ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், ராணுவ உயர் அலுவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் இதயத்தில் இடம்பிடித்து விட்டீர்கள். அந்த தருணத்தில் எந்த எந்த உதவி முடியுமோ அந்த உதவிகளை எல்லாம் தங்களின் தலைமையின் கீழ் உள்ள தமிழ்நாடு அரசின் மொத்த நிர்வாகமும் செய்து தந்தது. இதுபோன்ற ஆதரவுகள்தான் எதிர்காலத்தில் நம் இளைஞர்கள் தாமாக முன்வந்து ராணுவத்தில் சேருவதற்கும், ராணுவ உடை அணிவதற்கும், உற்சாகமூட்டுவதாகவும். ஊக்கமளிப்பதாகவும் அமையும்.

தக்ஷின் பாரத் பகுதியின் தலைமை அலுவலர் என்ற வகையில் தங்களுடைய முன்மாதிரியான ஆதரவுடன் பணியாற்றுவதில் பெருமை கொள்கிறேன். உங்களுடைய இந்த செயல் பணியில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கும், மூத்த ராணுவ வீரர்களுக்கும் தமிழ்நாடு அரசு நமக்கு ஆதரவாக இருக்கின்றது என்ற உணர்வை ஏற்படுத்தி ஊக்கத்தை அளிப்பதோடு தேவைப்படும் காலங்களில் அவர்களுக்கு இந்த அரசு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்பதை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது.

இந்த கடினமான சூழ்நிலையில் எங்களுக்கு உறுதுணையாக இருந்ததற்கு தங்களுக்கும் அனைத்து அரசு அலுவலர்களுக்கும் நம் மாநிலத்திற்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.