சென்னை: வங்கக்கடலில் மிதிலி புயல் உருவாகி உள்ளதால்,  தமிழ்நாட்டில் உள்ள 9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மத்திய மேற்கு வங்க கடலில்  கடந்த 14ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அது மேலும் வலுவடைந்துபுயலாக வலுப்பெற்றுள்ளது. இதற்கு மிதிலி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது, இன்று நள்ளிரவு தொடங்கி நாளை அதிகாலைக்குள்  வங்கதேசத்தின் மோங்லா – கேபுபரா இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த புயல்,  ஒடிசா மாநிலம் பாராதீப்பில் இருந்து 200 கி.மீ. தொலைவில் மிதிலி புயல் நிலை கொண்டுள்ளது. சுமார் 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் புயல் கரையை கடக்கும் என தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்,  வடமேற்கு வங்கக்கடலில் மிதிலி புயல் உருவானதை குறிக்கும் வகையில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. அதைத்தொடர்ந்து புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளிட்டுள்ள செய்தி குறிப்பில், மிதிலி புயல் காரணமாக,  வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மேற்கு வங்கம் மற்றும் அதை ஒட்டிய வங்கதேச கடலோரப்பகுதிகளில் இன்று குறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

ஒடிசா கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மத்திய வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தது.