காந்தி நகர்: அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் அதிதீவிர புயலாக மாறி இன்று  நள்ளிரவு குஜராத்தில் கரையை கடக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. புயல் காரணமாக, தென்தமிழகத்தின் சில பகுதிகள், குமரி மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது.

அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது.  நேற்று மாலை நிலவரப்படி கோவாவில் இருந்து 130 கி.மீ. தொலைவிலும் மும்பையில் இருந்து 450 கி.மீ. தொலைவிலும் குஜராத்தில் இருந்து 700 கி.மீ. தொலைவிலும் புயல் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் மேலும் தீவிரமடைந்துள்ளதுடன் தற்போது, 20 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதுடன், மும்பையில் இருந்து 160 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.இன்று இரவு குஜராத்தின் போர்பந்தர் – மதுவாக பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும் என்றும்,  இரவு 9 மணி முதல் நள்ளிரவு 11 மணிக்குள் கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அப்போது,  காற்றின் வேகம் 155 கி.மீ. முதல் 185 கி.மீ. வரை இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக தமிழகம், கர்நாடகம்  கேரளாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது.  மகாராஷ்டிராவில் மழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக மும்பையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொரோனா சிகிச்சை மையத்தில் 580 பேர் சிகிச்சை பெற்று வந்தவர்கள் வேறு முகாம்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

புயல் மற்றும் பலத்த காற்று, மழை காரணமாக கோவாவில் நேற்று மின் விநியோகம் தடைபட்டது. 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்ததாக  மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்து உள்ளார்.

குஜராத்தில் இன்று இரவ புயல் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சுமார்  1.5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் மாநில அரசு தெரிவித்து உள்ளது.

குஜராத்தில்,   ‘‘சவுராஷ்டிரா, போர்பந்தர், பாவ்நகர், அம்ரேலி, ஜுனாகத், கிர் சோம்நாத் உள்ளிட்ட பகுதிகள் புயலால் பாதிக்கப்படும் என்று கணித்துள்ளோம். கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். 85 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா மருத்துவமனை களில் மின் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம்’’ என்று மாநில முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

‘டவ் தே’ புயல் கரலணமாக மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.