பெங்களூரு: கொரோனா பரவலை தடுக்க தொலைநோக்கு பார்வையுடன் சுகாதார கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும்,  அனைத்து நோக்கத் திற்காகவும் அடுத்த 6 மாதங்களுக்கு மக்கள் ஒரு இடத்தில் கூடுவதை தடை செய்ய வேண்டும். கொரோனா பரவலை தடுக்க தேர்தல் வெற்றி கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா கடிதம் எழுதி உள்ளார்.

இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. கர்நாடகாவில் இன்றுமுதல் 15 நாட்கள் முழு ஊ ரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.  இந்த நிலையில், முன்னாள் பிரதமர் தேவகவுடா, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அவரது கடிதத்தில், கொரோனாவுக்கு  எதிராக நமது நாடு போராடி வருகிறது. இதை தடுக்க நீங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள் என்பதை நான் அறிவேன். சுகாதார நிர்வாகம் மற்றும் கொரோனா வைரஸ் நிர்வாக அதிகாரத்தை பரவலாக்க வேண்டும்.

நாடு முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். இந்த அதிகாரத்தை அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களி லும் இத்தகைய போர் அலுவலகங்களை திறக்க வேண்டும். கொரோனா முற்றிலுமாக குறைந்த பிறகே அவற்றை ரத்து செய்ய வேண்டும்.  கிராமங்களிலும்  கொரோனா பரவத்தொடங்கியுள்ளது. அதன் மீது சுகாதாரத்துறை கவனம் செலுத்த வேண்டும்.

கொரோனா தடுப்பூசி குறித்த நேர்மறையான தகவல்களை மக்களுக்கு அரசு வழங்க வேண்டும். இதில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மாநில அரசிடம் தடுப்பூசி போதுமான அளவுக்கு இருப்பு இருந்தால், பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள காலக்கெடு நிர்ணயம் செய்யலாம். தடுப்பூசி விரைவாக சென்றடைய மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய பொறுப்பு வழங்க வேண்டும்.

தடுப்பூசிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை குறித்து அதிகளவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.  அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்க அரசு முடிவு செய்தால், அது மிகப்பெரிய மனிதநேய செயலாக இருக்கும். இந்த விஷயத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபடும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு வாழ்க்கை காப்பீடு வசதி செய்து கொடுக்கப்பட்டது. அது ரத்து செய்யப்பட்டுள்ளது சரியல்ல. அந்த காப்பீட்டு வசதியை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டு உயிரிழந்த மருத்துவ ஊழியர்களின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மேலும்,

அனைத்து நோக்கத்திற்காகவும் அடுத்த 6 மாதங்களுக்கு மக்கள் ஒரு இடத்தில் கூடுவதை தடை செய்ய வேண்டும்.

5 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது வெற்றி கொண்டாட்டத்தை அனுமதிக்கக்கூடாது.

அனைத்து வகையான தேர்தல்களையும் அடுத்த 6 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்.

அனைத்து வசதிகளுடன் கூடிய தடுப்பூசி உற்பத்தி மையங்களை வட இந்தியா, தென்இந்தியாவில் தலா ஒன்று அமைக்க வேண்டும்.

தொலைநோக்கு பார்வையுடன் சுகாதார கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுகாதாரத்துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இந்த நோக்கத்தில் நாம் ஈடுபாட்டு உணர்வுடன் செயலாற்ற வேண்டியது அவசியம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.