நாகூர்:  நாகூரில் அமைக்கப்பட்டுள்ள சிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமகா, அந்த பகுதி கடலில் கச்சா எண்ணை பரவி கடுமைனா இன்னல்களை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுவரை  இரண்டுமுறை எண்ணை கசிவு  சரி செய்யப்பட்ட பிறகும் மீண்டும் மற்றொரு இடத்தில் எண்ணை கசவு ஏற்பட்டுள்ளது.

கசிந்து வானுயரத்தில் கச்சா எண்ணெய் பீய்ச்சி அடிப்பதால், நாகூர் பட்டினச்சேரியில் மக்களின் அச்சமடைந்துள்ளனர். மீனவர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

நாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் சிபிசிஎல் நிறுவனத்தின் சார்பாக பதிக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் குழாயில் ஏற்கனவே மார்ச் 2 ஆம் தேதி இரவு உடைப்பு ஏற்பட்டது. குழாய் உடைந்து கச்சா எண்ணெய் கடலில் கலந்த காரணத்தால் அப்பகுதி  மக்கள் மற்றும் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள்  தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சிபிசிஎல் நிர்வாகம், எண்ணை கசிவை சரி செய்தது. இருந்தாலும், மீண்டும் மற்றொரு இடத்தில் எண்ணை கசிவு ஏற்பட்டது. இதையடுத்து, 3, 4 , 5 ஆகிய தேதிகளில் மூன்றுமுறை குழாய் உடைப்பை சரி செய்ததாக சிபிசிஎல் நிர்வாகம் அறிவித்தனர்.

அதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் எண்ணெய் உள்ளிட்ட எந்தவித எரிவாயுக்களையும் குழாயில் கொண்டு செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதால் நாகூர் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு கடலுக்கு தொழிலுக்கு சென்றனர்.

இதனிடையே குழாயில் கச்சா எண்ணெய் செலுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்த நிலையில், இன்று பம்பிங் செய்து எண்ணை அனுப்ப முயற்சித்ததால்,  வானுயரத்தில் கச்சா எண்ணெய் பீய்ச்சி அடித்தது. இந்த எண்ணை கடலில் கலந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த  மீனவர்கள் கடற்கரையில் மீண்டும் திரண்டனர்.

ஏற்கனவே  சரி செய்யப்பட்ட அதே இடத்தில் மீண்டும் கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது அப்பகுதி  மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகை வட்டாட்சியர் ராஜசேகர் ஆய்வு மேற்கொண்டு மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மாவட்ட நிர்வாகம் உத்தரவை மீறி சிபிசிஎல் நிர்வாகம் செயல்படுவதாக புகார் தெரிவித்தனர்.