டெல்லி: ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால், தற்போது அமலில் உள்ள  கொரோனா ஊரடங்கு  ஜனவரி 31வரை  நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தொற்று பாதிப்பை பொறுத்து,  மாவட்ட அளவில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கலாம் என்றும் மாநில அரசுகளுக்கு  மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை மொத்தம் 19 மாநிலங்களில், 578 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொற்று பரவலை தடுக்கும் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டு உள்ளதுடன், 12வயது முதல் 18 வயது உடைய சிறுவர்களுக்கும் தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டுஉள்ளதுடன், முதியோர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஒமிக்ரான பரவல் தடுப்பு நடவடிக்கையாக டெல்லி, மும்பை உள்பட   8 மாநிலங்களில் இரவுநேர ஊடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு குறித்து வரும் 30ந்தேதி முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் அஜய் பல்லா  தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2022 ஜனவரி 31-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மாநிலங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,  கொரோனா தொற்றும், ஒமிக்ரான் தொற்றும்  பல்வேறு மாநிலங்களில் பரவி வருகிறது. கொரோனா மற்றும் ஒமிக்ரான்  வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகளே முடிவு எடுத்து, சூழலை ஆய்வு செய்து தேவைப்பட்டால் உள்ளாட்சி அளவில், அல்லது மாவட்ட அளவில் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முடிவு எடுக்கலாம்.

அடுத்துவரும் பண்டிகைக் காலமான புத்தாண்டு, பொங்கல், மகர சங்கராந்தி  காலங்களில் மக்கள் அதிகமாகக் கூடும் வாய்ப்பு இருக்கிறது.

இதனால் தொற்றுப் பரவல் அதிகரிக்கலாம் என்பதால் மாநிலங்களே கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முடிவு எடுக்கலாம்.

அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் மிகுந்த விழிப்புணர்வுடனும், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைத்து நிலையிலும் விழிப்புடன் இருந்து தயாராக இருக்க வேண்டும்,

முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தடுப்பு நடவடிக்கையிலும் சமரசம் செய்வதோ, கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதோ, சுணக்கம் காட்டுவதோ வேண்டாம்.

உள்ளாட்சிகள், மாவட்ட அளவில் கொரோனா பரவல், ஒமைக்ரான் பரவல் ஆகியவற்றை ஆய்வு செய்து, தகுந்த கட்டுப்பாடு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பண்டிகைக் காலங்களில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தேவைப்பட்டால் கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.

நாட்டில் 2022, ஜனவரி 31-ம் தேதிவரை பேரிடர் மேலாண்மைச் சட்டம் நடைமுறையில் இருப்பதால், சட்டத்தை மீறுவோர் மீது பிரிவு 51 60-ன் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.

பொது இடங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும்,

பொது இடங்களில் எச்சில் துப்புதல் தடை செய்யப்படுகிறது.

அனைத்து இடங்களிலும் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும்.

வீட்டிலிருந்து பணியாற்றுவதை ஊக்கப்படுத்த வேண்டும்”.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.