ரியோடிஜெனிரோ: அனுமன் சஞ்சீவி மூலிகையை கொண்டுவந்து லக்ஷ்மன் உயிரை காப்பாற்றியது போல பிரேசில் மக்களைக் காக்க வேண்டும் என்று அந்நாட்டு பிரேசில் அதிபர் ஜேர் போல்செனாரோ பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால், சுமார் 14 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82,000ஐ கடந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்தாக ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை எடுத்துக் கொள்ளலாம் என்று அமெரிக்கா அண்மையில் அறிவித்தது.

இதனையடுத்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐசிஎம்ஆரும், கொரோனா தடுப்பு மருந்தாக ஹைட்ராக்சி குளோரோகுயினை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்தது. அதன் பின்னர் ஹைட்ரோகுளோரோகுயின் ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்தது.

இந்நிலையில், பிரதமர் மோடியுடன் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை இந்தியா ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.அமெரிக்கா இன்றி மற்ற சில உலக நாடுகளும் இதே கோரிக்கையை வைத்தன.

இதனையடுத்து ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்கு இருந்த தடையை மத்திய அரசு நேற்று தளர்த்தியது. இதனையடுத்து, ராமாயணத்தை மேற்கோள்காட்டி பிரேசில் அதிபர் இந்திய பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், அனுமன் சஞ்சீவி மூலிகையை கொண்டுவந்து லக்ஷ்மன் உயிரை காப்பாற்றியது போல இந்தியா ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்கி பிரேசில் மக்களைக் காக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.