சென்னை: சென்னையில் கொரோனா பரவல்  அதிகரித்து வரும் நிலையில்,  தனிமைப்படுத்தப்பட்ட தெருவை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று பார்வையிட்டார்.

தமிழ்நாட்டில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா தொற்று மற்றும் ஒமிக்ரான பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில், ஒரு தெரு தனிமைப்படுத்தப்பட்ட தெருவாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் சென்னையில் கொரோனா தொற்று காரணமாக ஒரு தெரு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து, இன்று காலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர், அசோக்நகர் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட தெருவுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

அதையடுத்து, அவர்கள்  கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:  இந்தியா முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. சென்னையிலும் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  நேற்று சென்னையில் 194 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், சென்னை அசோக் நகர், எல்.ஜி.ஜி.எஸ் காலனி 19வது தெருவில் உள்ள இரண்டு வீட்டில் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதி தனிமைபடுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று பரவலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள சென்னை மக்கள் அனைவருமே முகக்கவசம் அணிய வேண்டும்,   இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதித்த 45 பேரில் 16 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்றவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அனைவருமே அறிகுறிகள் அற்ற பாதிப்புடன் உள்ளனர். இவர்களைத் தவிர 120 பேருக்கு எஸ் ஜீன் குறைபாடு கண்டறியப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வேகமாகப் பரவும் ஒமைக்ரான் தொற்றைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 15 முதல்18 வயது வரையிலான மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை வரும் 3ஆம் தேதி சென்னை போரூர் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். மேலும், மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வேகமாக பரவும் நோய் தொற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு  கூறினார்.

கொரோனா பரவல்: சென்னை அசோக் நகர் எல்.ஜி.ஜி.எஸ் காலனி தனிமை படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு…