சென்னை

மிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல் படுத்தி உ ள்ள ஊரடங்கில் காவல்துறையினருக்கான வழிகாட்டு முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர தமிழகத்தில் ஜனவரி 10 வரை  தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.  அதன்படி 6ஆம் தேதி முதல் வாரநாட்களில் இரவு 10 மணி  முதல்  காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.  தவிர 9 ஆம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் காவல்துறையினருக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன

அவை பின்வருமாறு :

* மத்திய மற்றும் மாநில அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், நீதிமன்றம் மற்றும் நீதிந்துறை தொடர்பான பணிகளில் ஈடுபடுவோர். உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிவோர், வங்கி பொதுப் போக்குவரத்து, உள்ளிட்டவர்கள் அலுவலுக்காகப் பயணம் மேற்கொள்ள அடையாள அட்டையைப் பார்வையிட்டு அனுமதிக்க வேண்டும்.

* அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம் மின்சாரம், தகவல் தொடர்பு, தினசரி பத்திரிக்கை விநியோகம், மருந்துகள் மற்றும் மருத்துவம் சார்ந்த அனைத்து சேவைகள், ATM மையங்கள், சரக்கு மற்றும் எரிபொருள் வாகனங்களில் பணிபுரிவோர் அடையாள அட்டையைப் பார்வையிட்டு அனுமதிக்க வேண்டும்.

* சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்படும் விவசாய விளைபொருட்கள், காய்கறி, பழங்கள், கறிக்கோழிகள், முட்டை போன்ற வாகனங்களை எக்காரணம் கொண்டும் தடை செய்யக்கூடாது. மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் சரக்கு வாகனங்களுக்கும் இது பொருந்தும்.

* உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில் நுட்ப சேவை உள்ளிட்ட நிறுவனப்பணியாளர்கள் அடையாள அட்டை காண்பித்து பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

* 09.01.2022 அன்று முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளபோது உணவகங்களில் பார்சல் சேவைகள் மட்டும் காலை 07.00 முதல் இரவு 10.00 வரை அனுமதிக்கப்படும். உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனப் பணியாளர்களை மேற்குறிப்பிட்ட நேரங்களில் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

* மத்திய மற்றும் மாநில அரசுப்பணியாளர் தேர்வாணையம், நிறுவனங்களின் நுழைவுத்தேர்வு மற்றும் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகளுக்குச் செல்வோர் அழைப்பு கடிதத்தைக் காட்டினால் அனுமதிக்க வேண்டும். 09.01.2022 அன்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணிகளுக்கான தேர்வுகள் நடக்கவுள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

* விமானம், இரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்குச் செல்லும் பயணிகளையும், விமானம், இரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்து வீடுகளுக்குச் செல்லும் பயணிகளையும் அனுமதிக்க வேண்டும். சொந்த மற்றும் வாடகை வாகனங்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு.

* கிராமப்புறப் பகுதிகளில் விவசாயிகள், விவசாயப் பணிக்காகச் செல்பவர்களை அனுமதிக்க வேண்டும். அவசர காரணங்களுக்காக வெளியூர் செல்வோர், பணி முடிந்து சொந்த ஊருக்குத் திரும்புவோரைப் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

* வாகனச் சோதனையின் போது வாகன ஓட்டிகளிடம் கனிவாகவும், மனித நேயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.

* வாகனத்தைச் சோதனை செய்ய வேண்டியிருந்தால் கையுறை அணிந்திருக்க வேண்டும். அடிக்கடி கைகளைக் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

* இரவு வாகனச் சோதனை வெளிச்சம் உள்ள இடங்களில் நடத்த வேண்டும்.

* காவலர்கள் தடுப்பான்கள் அமைத்து ஒளிரும் மேற்சட்டை அணிந்து பாதுகாப்பாக இரவு நேரங்களில் பணியாற்ற வேண்டும்

என அறிவிக்கப்பட்டுள்ளது.