டில்லி

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி தனது பிளாஸ்மாவை நன்கொடை செய்ய முன் வந்துள்ளார்.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டோருடைய பிளாஸ்மாவை செலுத்துவதன் மூலம் கொரோனா நோயாளிகளைக் குணப்படுத்துவதற்கு பிளாஸ்மா சிகிச்சை எனப் பெயராகும்.   இந்த சிகிச்சை முறைக்கு மத்திய சுகாதாரத் துறை ஒப்புதல் அளிக்காததால் இந்த முறை இன்னும் பரிசோதனை அளவில் உள்ளது.   பல மாநிலங்களில் இந்த சிகிச்சை முறையில் வெற்றி கண்டறியப்பட்டுள்ளது

இதையொட்டி மகாராஷ்டிர மாநிலம் பிளாட்டினா திட்டம் என ஒரு திட்டத்தைத் தொடங்கி உள்ளது.  உலகத்தில் மிகப் பெரிய பிளாஸ்மா சிகிச்சை முயற்சி திட்டமான இதில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை நடத்தப்பட உள்ளன.  அத்துடன் அரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு எடுத்துள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரும் செய்தி தொடர்பாளருமான அபிஷேக் மனு சிங்வி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.  தற்போது இவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நேற்று தனது டிவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர், “இறைவன் அருளால் எனக்கு கொரோனாவை குணப்படுத்த பிளாஸ்மா சிகிச்சை தேவைப்படவில்லை.  மிகவும் திறனுள்ள இந்த தீர்வுக்குச் செயற்கை தடை விதிப்பது முட்டாள் தனமானது.   டில்லி சுகாதார அமைச்சர் பிளாஸ்மா சிகிச்சையால் குணம் டைந்துள்ளர்.  நான் குணம் அடைந்ததும் எனது பிளாஸ்மா மருத்துவ ரீதியாகப் பயன்படும் என்றால் அதை நன்கொடையாக அளிக்க நானாகவே முன்வந்துள்ளேன்” எனப் பதிந்துள்ளார்.