சிக்கந்தராபாத்,  உத்திரப்பிரதேசம்

பிரியங்கா காந்தியை சிறுமி என மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா விமர்சித்துளது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

காங்கிரஸ் தலைமைச் செயலர் பிரியங்கா காந்தி உத்திரப்பிரதேசம் கிழக்கு பகுதியின் பொறுப்பாளராக உள்ளார்.  இவர் இன்று பிரயாக் ராஜ் நகரில் இருந்து வாரணாசி வரை தனது மூன்று நாள் கங்கை யாத்திரையை தொடங்கி உள்ளார்.   இது உத்திரப் பிரதேச மக்களிடையே நல்ல வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று உத்திரப்பிரதேச மாநிலம் சிக்கந்தராபாத் நகரில் பாஜக தேர்தல் பேரணி நடந்தது.  இதில் கலந்துக் கொண்ட மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா, “முதலில் பப்பு (ராகுல் காந்தி) தாம் பிரதமராகப் போவதாக தெரிவித்தார்.  அதன் பிறகு மாயாவதி, அகிலேஷ் யாதவை தொடர்ந்து பப்பியும் (பிரியங்கா காந்தி) அவருடன் சேந்துள்ளார்.

தற்போது இந்திய தேச மகள் எனக் கூறிக் கொள்ளும் பிரியங்கா காந்தி முதலில் இந்திய தேச மகள் இலையா? காங்கிரஸ் கட்சியின் மகளாக மட்டும் இருந்தாரா?  அவர் இந்த நாட்டுக்கு புதிதாக என்ன செய்யப் போகிறார்?

தற்போது நடைபெற உள்ள தேர்தலில் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் இசைக்கு மம்தா பானர்ஜி நடனமாடுகிறார்.   ஆனால் இதை ரசிக்க ஆட்கள் இல்லை.  ஏனென்றால் அவர்கள் அனைவரையும் விட மோடி உயர்ந்த நிலையில் இருக்கிறார்” என பேசி உள்ளார்.

மத்திய அமைச்சரின் பேச்சு மக்களிடையே அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.    கலாச்சாரத்துறை அமைச்சர் இப்படி கலாச்சாரமில்லாமல் பேசுவது கண்டனத்துக்குறியது என ஒரு காங்கிரஸ் தொண்டர் கூறி உள்ளார்.