விழுப்புரம்: விழுப்புரத்தில் கன்டெய்னர் லாரி மோதி  பெரியார் சிலை சேதம் அடைந்தது. இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அங்கு விரைந்து வந்த  எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன் ஆகியோர் சேதமடைந்த சிலையை பார்வையிட்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர்.

விழுப்புரம் காமராஜர் வீதியில் சாலையின் நடுவே பெரியார் சிலை உள்ளது.  6 அடி உயரத்திலான அந்த சிலை  4 அடி பீடத்தின் மீது அமைத்து, அந்த  சிலையை சுற்றிலும் இரும்பு கூண்டு அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணியளவில் அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரி,  சாலையின் நடுவே இருந்த பெரியார் சிலை மீது மோதியது. இதில் அந்த சிலை பீடத்துடன் உடைந்து முற்றிலும் சேதம் அடைந்தது.

இது பற்றிய தகவல் அறிந்து விழுப்புரம் நகர போலீசார் அங்கு விரைந்து சென்று கன்டெய்னர் லாரி டிரைவரை மடக்கிப் பிடித்தனர். இதனிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், தாசில்தார் அனந்தகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கன்டெய்னர் லாரியை ஓட்டிய டிரைவர் மகாராஷ்டிராவை சேர்ந்த மச்சீந்திரா தபலி (வயது 52) என்பதும்,  கூகுள் மேப்பை பார்த்து வந்தபோது, வழிதவறி விழுப்புரம் காந்தி சிலை வழியாக காமராஜர் வீதிக்குள் வந்தபோது எதிர்பாராதவிதமாக பெரியார் சிலை மீது மோதியது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, லாரியை பறிமுதல் செய்து விழுப்புரம் ஆயுதப்படை மைதானத்துக்கு கொண்டு சென்றனர். டிரைவர் கைது செய்யப்பட்டார்.

பெரியார் சிலை சேதம் அடைந்த சம்பவம் பற்றிய தகவல் காட்டுத்தீபோல் பரவியது. விழுப்புரம் காவல்நிலையம் முன்பு அமர்ந்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், நாங்கு முனை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். சேதம் அடைந்த பெரியார் சிலையை எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன் ஆகியோர் பார்வையிட்டனர்.

அரசியல் கட்சியினரும், நகர பொதுமக்கள் பலரும் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பெரும் பதட்டமான சூழ்நிலை நீடித்ததால் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். சேதம் அடைந்த பெரியார் சிலையை கைப்பற்றி விழுப்புரம் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்குள்ள ஒரு அறையில் வைத்து அந்த அறையை சீல் வைத்தனர். பெரியார் சிலை சேதம் அடைந்த இடத்தை நகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்தனர்.