சென்னை: 15 மாவட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை  மற்றும் விவசாயிகள் கண்காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் 2 நாள் முகாமிடுகிறார்.

ஜூலை 25ந்தேதி திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.  26-ந் தேதி  விவசாயிகள் கண்காட்சி உள்பட பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார் மேலும், ரூ.140 கோடி மதிப்பில் நிறை வேற்றப்பட்ட 14 திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார்.

2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி, நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் இப்போதே தங்களது தேர்தல் பிரசார வியூகங்களை வகுக்கத் தொடங்கி விட்டன. மத்திய பாஜக ஆட்சியை அகற்ற எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்,   தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திருச்சியில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். கட்சி நிகழ்ச்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.

ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலை சந்திக்க மாநிலம் முழுவதும் தி.மு.க. 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, மண்டலம் வாரியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி பாசறை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதல் கூட்டம் திருச்சியில் நடத்தப்படுகிறது. இதில் கலந்துகொள்வது உள்பட பல்வேறு அரசு திட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளும் வகையில்,   நாளை மறுநாள் (26-ந் தேதி)  சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்கிறார்.  அவருக்கு திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினை வரவேற்பு அளிக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து, திருச்சி ராம்ஜி நகர் அருகே  மாலை 4மணி நேரத்தில்,  வாக்குச்சாடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதில்,  டெல்டா மண்டலத்துக்குட்பட்ட அரியலூர், பெரம்பலூர், கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை மத்தியம், தஞ்சை தெற்கு, திருச்சி மத்தியம், திருச்சி தெற்கு திருச்சி வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, வடக்கு ஆகிய 15 மாவட்டங்களின் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மாவட்டங்களின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்துகொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இந்த கூட்டத்தை மாநாடு போல் பிரம்மாண்டமாக நடத்த தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு ஏற்பாடு செய்துள்ளார்.

இதற்காக திருச்சி ராம்ஜிநகர் பரமேஸ்வரி மில் பகுதியில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவிலான இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு மேடை மற்றும் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் 12,000 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் மற்றும் அவர்களுடன் வருவோர் என 30, ஆயிரம் பேருக்கு மதிய உணவு வழங்கப்படுகிது. கூட்டத்திற்கு வருபவர்களின் வாகனங்களை நிறுத்த கூட்டம் நடைபெறும் இடத்தின் அருகே 20 ஏக்கர் இடத்தில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 27ந்தேதி, திருச்சி-திண்டுக்கல் சாலையில் உள்ள கேர் என்ஜினீயரிங் கல்லூரியில்  தொடங்கும் வேளாண் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வை யிடுகிறார். வேளாண் உழவர் நலத்துறை சார்பில் வேளாண் சங்கமம் 2023 என்ற பெயரில் நடைபெறும் இந்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி 3 நாட்கள் நடைபெறுகிறது. மாநில அளவிலான இந்த கண்காட்சியில் 250 உள் அரங்குகளும், 50 வெளி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. 17 மாநில அரசுத்துறைகளும், மத்திய அரசின் 8 ஆராய்ச்சி நிறுவனங்களும், 3 வேளாண்மை சார்ந்த பல்கலைக்கழகங்களும் 80-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும் கண்காட்சியில் பங்கேற்க உள்ளன.

பாரம்பரிய நெல் வகைகள், பாரம்பரிய வேளாண் கருவிகள், பல்வகை தென்னை ரகங்கள், செயல்விளக்க திடல்கள், பசுமைகுடில்கள் உள்ளிட்டவை கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுகிறது. விவசாயிகளுக்கு பயன்படும் புதிய தொழில்நுட்பம் குறித்த தலைப்புகளில் கருத்தரங்கு நடக்கிறது. கண்காட்சிக்கு வரும் விவசாயிகளுக்கு தேவைப்படும் அனைத்து பயிர்களின் விதைகள், தென்னங்கன்றுகள், பழமரக்கன்றுகள், காய்கறி விதைகள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், இயற்கை வேளாண் விளைபொருட்கள், இயற்கை பருத்தி ஆடை, மூலிகைச்சாறு, பானங்கள் உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்பட உள்ளது.

இயற்கை வேளாண்மை-புதிய தலைமுறை விவசாயிகளுடன் கலந்துரையாடல், வீட்டுத் தோட்ட செய்முறை விளக்கம், பாரம்பரிய விதைக் கண்காட்சி ஆகியவையும் இடம் பெறுகின்றன. உங்கள் ஊர் மண்ணுக்கு ஏற்ற செடி கொடிகள் எது, தேனில் அபரிமிதமான லாபம் பார்ப்பது எப்படி என்பதற்கான விளக்கங்களும் வேளாண் நிபுணர்களால் அளிக்கப்படுகிறது. கண்காட்சியை காண வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு நுழைவு கட்டணம் கிடையாது. அனுமதி இலவசம்  என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதை தொடர்ந்து, பிற்பகலில் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூருக்கு செல்கிறார். மாலை 5 மணியளவில் பொலிவுறு நகரத்திட்டத்தின் கீழ் புதிய பஸ் நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள ஆம்னி பஸ் நிலையம், மாநாட்டு அரங்கம் உள்பட ரூ.140 கோடி மதிப்பிலான 14 திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.