சென்னை:
மு.க.ஸ்டாலின் முதல்வராக காங்கிரஸ் பாடுபடும்என்று தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் , திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற காங்கிரஸ் கட்சி பாடுபடும் என்று தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது ராகுல்காந்தி, ஸ்டாலின்தான் முதல்வராக வேண்டும் என கூறியிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பே , ராகுல் காந்தியை அடுத்த பிரதமர் என முதன்முதலாக மு.க.ஸ்டாலின் அறிவித்ததை , நன்றியுணர்வுடன் நினைவில் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அவர் மேலும் பேசும் போது, ‘மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளில், 39 தொகுதிகளில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியை மக்கள் அமோக வெற்றி பெறச் செய்தனர்.

அதேபோல் ராகுல்காந்தியின் கனவை நிஜமாக்கும் வகையில் , வரும் தேர்தலை தி.மு.க.வுடன் காங்கிரஸ் இணைந்து சந்திக்கும். 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நிலை இதுதான் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.