வுகாத்தி

சாம் சட்டப்பேரவை தேர்தலில் பிரசாரத்தைத் தொடங்கிய காங்கிரஸ் கட்சி விவசாயக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை தெரிவித்துள்ளது.

வரும் ஆண்டு மார்ச் – ஏப்ரல் மாதங்களில் அச்சாம் சட்டப்பேரவையில் தேர்தல்கள் நடைபெற உள்ளன.  இதையொட்டி காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளது.   இதையொட்டி அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் ரிபுன் போரா தனது செய்தியாளர் சந்திப்பை நேற்று கவுகாத்தியில் நடத்தி உள்ளார்.  அப்போது அவர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் பற்றித் தெரிவித்துள்ளார்.

ரிபுன் போரா, “அசாம் மாநிலத்தில் விவசாயிகள் நிலை மிகவும் மோசமாக உள்ளது.  விவசாய செலவு அதிகரிக்கும் நேரத்தில் அவர்களுக்குத் தேவையான குறைந்த பட்ச ஆதார விலை கிடைப்பதில்லை.   இந்நிலையில் வேளாண் சட்டங்கள் மூலம் அவர்கள் மேலும் துயருற உள்ளனர். எனவே காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அசாமில் விவசாயக்கடன் ரத்து செய்யப்படும்.  ஏற்கனவே ராஜஸ்தான், சத்தீஸ்கர், பஞ்சாப் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் இதைச் செய்துள்ளது.

கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழைகள் குறிப்பாக மகளிர் பலர் சிறு கடன் நிறுவனங்களிடம் கடன் பெற்று பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.  எனவே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு சிறுகடன்கள் வழங்கி உதவ உள்ளோம்.  அத்துடன் இந்த பெண்களின் பொருளாதார வசதிக்காக நியாய் என்னும் குறைந்த பட்ச ஊதிய உத்தரவாத திட்டம் அமல்படுத்த உள்ளோம்.  இந்த திட்டம் நோபல் பரிசு பெற்ற மேதம் அபிஜித் பானர்ஜி காங்கிரஸுக்காக உருவாக்கியதாகும்.

அசாம் மாநிலத்தில் மக்களின் வருமானம் அதிகரிக்கவில்லை.  ஆனால் மின் கட்டணம் அதிகரித்து போதுமான மின்வசதியும் இல்லாமல் உள்ளது.  காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு ஏழை மற்றும் மத்தியம குடும்பத்துக்கும் 120 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்குவோம். இதன் மூலம் 60 லட்சம் குடும்பங்கள் பயனடையும்..

பாஜக அரசு அறிவித்தபடி 25 லட்சம் வேலை வாய்ப்பு கிடைக்காததால்  இளைஞர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்., இதுவரை பாஜக அரசு சுமார் 1 லட்சம் வேலை வாய்ப்புகள் மட்டும் அளித்து தங்களது அறிவிப்பு ஒரு தேர்தல் ஸ்டண்ட் என நிரூபித்துள்ளது.  காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக வேலை இன்மை நீக்கப்படும்.   ஒரு குடும்பத்தில் குறைந்தது ஒருவருக்கு வேலை என்னும் திட்டம் இயற்றப்படும்.

நான் இந்த வருடம் இப்போது தான் பிறந்துள்ள நிலையில் பாஜகவை தாக்கிப் பேசவோ அல்லது நேர்மறையானவற்றைக் கூறவோ விரும்பவில்லை.  மக்கள் முன்னேற்றத்துக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் காங்கிரஸ் நிறைவேற்றும் என்பதை மட்டும் நான் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.