டில்லி

எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் பிரதமரை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வந்துள்ளதாகக் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சிகள் மத்திய பாஜக அரசு மீது கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை பேசினார்  அதையடுத்து, காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசினார்.

அவர்,

”இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தைப் பிரதமர் மோடியின் மவுனத்தைக் கலைக்கவே கொண்டு வந்தோம். நாங்கள் இந்திய நாட்டு மக்கள் நலன் மீது மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம்.  இன்று பிரதமரை நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது.

நாங்கள் யாரும் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து நாங்கள் யாரும் யோசிக்கவில்லை. நாங்கள் பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து மணிப்பூர் பிரச்சினை குறித்துப் பேச வேண்டும் என்று தான் கோரிக்கை விடுத்தோம்.

மேலும் நாங்கள் எந்த பாஜக உறுப்பினரையும் அவைக்கு வரச்சொல்லவில்லை. பிரதமர் மோடி வரவேண்டும் என்று மட்டுமே கூறினோம் ”

எனப் பேசி உள்ளார்.