போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசுக்கு, பாரதீய ஜனதாவை சேர்ந்த 2 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளதானது பெரிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாராயண் திரிபாதி மற்றும் ஷரத் கோல் என்ற இரு பா.ஜ. சட்டமன்ற உறுப்பினர்களும், கிரிமினல் சட்ட மசோதா 2019 மீதான வாக்கெடுப்பின்போது, அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அவர்கள் இருவருமே முன்னாள் காங்கிரஸ்காரர்களே. தாங்கள் இனிமேலும் பாரதீய ஜனதாவின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை என அவர்கள் தெரிவித்தனர். திரிபாதி மெய்ஹர் தொகுதியிலிருந்தும், கோல் பியோஹரி தொகுதியிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டவர்கள்.

தங்களின் தொகுதி முன்னேற்றத்திற்காகவே அரசுக்கு ஆதரவாக இருப்பதாக கூறுகின்றனர் அந்த இருவரும். அவர்கள் விரைவில் காங்கிரசில் இணையவுள்ளனர். மத்தியப் பிரதேச சட்டசபையில், கிரிமினல் சட்ட மசோதாவிற்கு ஆதரவாக 122 வாக்குகள் விழுந்தன.

கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி அரசை பாரதீய ஜனதா கவிழ்த்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் பாரதீய ஜனதாவின் 2 சட்டமன்ற உறுப்பினர்களை காங்கிரஸ் வளைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.