டில்லி

ஆர் எஸ் எஸ் நடத்திய கூட்டத்தில் கலந்துக் கொண்டது குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜனார்தன் திவிவேதி விளக்கம் அளித்துள்ளார்.

டில்லி செங்கோட்டையில் நேற்று முன் தினம் கீதா மகோத்சவம் என்னும் ஆன்மீகக் கூட்டம் ஒன்று நடந்தது.   இதை ஆர் எஸ் எஸ் நடத்தியதாகக் கூறப்பட்டது.  இந்த நிகழ்வில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.  அவருடன்  மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி, ராமர் கோவில் ஆர்வலர் சாத்வி ரிதம்பரா மற்றும் பல ஆன்மீக தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜனார்தன் திவிவேதி கலந்துக் கொண்டார்.  பாஜக அமைச்சர்கள் மற்றும் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் ப்கவத் ஆகியோருடன் ஒரே மேடையில் காங்கிரஸ் தலைவர் கலந்துக் கொண்டது பலருக்கும் வியப்பை உண்டாக்கியது.

இது குறித்து ஜனார்த்தன் திவிவேதி தமக்குத் தனிப்பட்ட முறையில் இந்நிகழ்வுக்கு அழைப்பு வந்ததால் கலந்துக் கொண்டதாக விளக்கம் அளித்துள்ளார்.  அத்துடன் தாம் அந்த நிகழ்வில் கலந்துக் கொண்டதற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.