திருவனந்தபுரம்: கேரள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி  சார்பில், மக்கள் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,  குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.2000, 100யூனிட் மின்சாரம் இலவசம், வீடுகட்ட ரூ.6 லட்சம் நிதி உள்பட  ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நாடு முழுவதும் 5 மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்று மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
கேரள மாநிலத்திலும் சட்டமன்ற தேர்தலையொட்டி, வேட்புமனுக்கள் தாக்கல் முடிவடைந்து இன்று மனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. கேரள எதிர்க்கட்சித் தலைவரும், மாநில காங்கிரஸ் தலைவருமான ரமேஷ் சென்னிதாலா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

இல்லத்தரசிகளுக்கு ரூ .2000 மாதாந்திர ஊதியம்,

அனைத்து வெள்ளை நிற ரேசன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 5 கிலோ இலவச அரிசி

மாநிலத்தில் 5 லட்சம் பேருக்கு வீடு கட்ட உதவி

சபரிமலை அய்யப்பன் கோயிலின் மரபுகளைப் பாதுகாப்பதற்கான ஒரு சிறப்புச் சட்டமும்,

அரசு வேலைகளுக்கான தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும்  தாய்மார்களுக்கு இரண்டு வயது தளர்வு

40-60 வயதுக்குட்பட்ட இல்லத்தரசிகள், 2019 ஆம் ஆண்டில் காங்கிரஸால் தொடங்கப்பட்ட குறைந்தபட்ச வருமான உத்தரவாதத் திட்டமான ‘நியாய்’ (Nyay ) திட்டத்தின் கீழ்  ரூ .2000 மாத ஓய்வூதியத்திற்கு உரிமை பெறுவார்கள்.

கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச உணவு  மற்றும்  மருத்துவமனையில் இலவச சிகிச்சை

SC வீடுகள் கட்ட எஸ்சி மற்றும் எஸ்டி குடும்பங்களுக்கு 6 லட்சம் நிதி உதவி

NYAY திட்டத்தில் இல்லாத ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் 6000 ஊதியம் (வருடத்துக்கு  ரூ. 72ஆயிரம்)

எரிபொருள் மானியம் வழங்கப்படும், டாக்சிகள் மற்றும் மீன்பிடி படகுகளுக்கு எரிபொருள் மானியம் வழங்கப்படும்

அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் 10,000 பெண்களுக்கு 2 சக்கர வாகனங்கள் வழங்கப்படும். இது பெண்களுக்கு அதிக தன்னிறைவு பெற ஊக்கமளிக்கும்.

உள்பட ஏராளமான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

நேற்று கேரள முதல்வர் பினராயி தலைமையிலான  கேரள ஆளும் கட்சி கூட்டணி (எல்டிஎஃப்) தேர்தல் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.