டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக  அமலாக்கத்துறை விசாரணைக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று 2வது நாளாக ஆஜரானார். அவருடன் மகன் ராகுல்காந்தியும், மகள் பிரியங்கா காந்தியும் அமலாக்கத்துறை அலுவலகம் வந்திருந்தனர்.

காங்கிரஸ் கட்சியின் பத்திரிகையான நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை,  அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனம் வாங்க,. காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடியே 25 லட்சத்தை வட்டியில்லா கடனாக கொடுத்தது. அந்த கடனை அசோசியேட்டடு நிறுவனம் திருப்பிச் செலுத்த முடியாததால், அதன் பங்குகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை இயக்குனர்களாக கொண்ட யங் இந்தியா நிறுவனம் வாங்கிக்கொண்டது. இதன்மூலம் வெறும் ரூ.50 லட்சம் மூலதனத்தில் தொடங்கப்பட்ட யங் இந்தியா நிறுவனம், ரூ.90 கோடி கடனுக்காக அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2000 கோடி மதிப்புள்ள சொத்துகள், பங்குகளை பெற்றுக்கொண்டதாகவும் இதில் முறைகேடு இருப்பதாகவும் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதை அடிப்படையாக கொண்டு, சோனியாகாந்தி, ராகுல்காந்தி  மீது  சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே  ராகுல்காந்தியிடம் 5 நாட்கள் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

இதையடுத்து சோனியாகாந்தி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி முதல்கட்ட விசாரணைக்காக கடந்த 21-ம் தேதி (ஜூலை) அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோனியா காந்தி ஆஜரானார். அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு சுமார் 2 மணி நேரம் மட்டுமே  அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து 26-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சோனியா காந்திக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அதன்படி, இன்று 2வது நாளாக  அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோனியா காந்தி  ஆஜரானார்.

இன்ற காலை 11 மணி அளவில் ஆஜரான அவரிடம்  நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அமலாக்கத்துறை அலுவலகம் முன் குவிந்த காங்கிரசால் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.