ராய்ப்பூர்

த்திய பிரதேசத்தை தொடர்ந்து சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் அரசும் காவல்துறையினருக்கு வார விடுமுறை அளித்துள்ளது.

காவல்துறையினர் வெகு நாட்களாக மாநில அரசுகளிடம் தங்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். மற்ற அரசு மற்றும் தனியார் ஊழியர்களைப் போல் தாங்களும் தங்கள் வார விடுமுறையின் போது குடும்பத்துடன் கழிக்க வேண்டும் எனவும் ஆசை தெரிவித்தனர். அவர்கள் குடும்பத்தினரும் இவர்கள் குடும்பத்துடன் செலவழிக்க நேரமில்லாமல் உள்ளதாக கவலை தெரிவித்தனர்.

பல கட்சிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சி செய்த போதிலும் இது குறித்து யாரும் கவனம் செலுத்தாமல் இருந்தனர். இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் அமைந்த காங்கிரஸ் ஆட்சியில் இது குறித்து முடிவு எடுக்கப் பட்டது. அம்மாநிலத்தில் காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்க முதல்வர் கமல்நாத் உத்தரவிட்டார்.

தற்போது அதே வரிசையில் மற்றொரு காங்கிரஸ் அரசான சத்தீஸ்கர் மாநில அரசும் காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும் என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் அமுலுக்கு வர உள்ளது.