டெல்லி: காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் நிர்வாகிகளுக்கு ‘கியூஆர் கோடு’டன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அக்ல இந்திய காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 3 ஆண்டுகளாக தேந்தெடுக்கப்பட்ட தலைவர் இல்லாமல், இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் கட்சி வழிநடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு, நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகிது முதல் தற்போதுவரை கட்சியின்  இடைக்கால தலைவராக சோனியாகாந்தி தொடர்ந்து வருகிறார். அதுபோல நடைபெற்று வரும் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்து வருகிறது.

இதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் மூலம் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட வேண்டும் என மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதையடுத்து, கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல், அக்டோபர் 17-ந் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், செப்டம்பர் மாதம்  24-ந் தேதி முதல் 30-ந் தேதிவரை நடைபெற உள்ளது. இதற்கிடையில் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட பலர் முன்வந்துள்ளதாகவும், சிலர் காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்களை களமிறக்க முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதுபோல, தலைவர் தேர்தலில் வாக்களிக்கப்போகிறவர்கள் யார் என்பது குறித்த தகவலை வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், காங்கிரசின் தேர்தல் பிரிவு தலைவர் மதுசூதன் மிஸ்திரி தலைமையில், மாநில அளவில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. அதில், திட்டமிட்டபடி, புதிய மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் தேர்தலை இம்மாதம் 16-ந் தேதியில் இருந்து 20-ந் தேதிக்குள் நடத்தி முடிக்கும்படி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு மதுசூதன் மிஸ்திரி உத்தரவிட்டார்.

மேலும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகளுக்கும் ‘கியூஆர்’ கோடு வசதியுடன் கூடிய அடையாள அட்டை அளிக்குமாறு கூறினார்.

இத்தேர்தலில் மொத்தம் 9 ஆயிரத்துக்கு மேற்பட்ட பிரதிநிதிகள் ஓட்டுப்போட உள்ள நிலையில், அவர்களின் பெயர்கள் 20-ந் தேதிக்குள் இறுதி செய்யப்பட்டு, பட்டியல் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதற்கிடையில், கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், தலைவர் பதவிக்கான தேர்தலில்,  சோனியாகாந்தி குடும்பத்தினர் அல்லாத வெளிநபர் நிறுத்தப் பட்டால், தானும் போட்டியிட போவதாக  அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன், தேர்தலில்,  வாக்களிப்பவர்கள் பட்டியலை வெளியிடுமாறு அவர் கோரியுள்ளார். வேட்புமனு ஏற்கப்பட்டவுடன், வாக்காளர் பட்டியல் நகல் அளிக்கப்படும் என்று தேர்தல் பிரிவு உறுதி அளித்துள்ளது.