டெல்லி: விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது.

 

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லி சலோ என்ற பெயரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசு நடத்திய 5 கட்ட பேச்சுவார்த்தைகளிலும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. வரும் 9ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு காணப்படாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளதாக விவசாயிகள் சங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

அந்த வகையில் வரும் 8ம் தேதி பாரத் பந்த்திற்கு விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இந் நிலையில், இந்த போராட்டத்துக்கு தமது முழு ஆதரவை அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச சந்தித்த செய்தி தொடர்பாளர் பவன் கெரா கூறியதாவது: டிசம்பர் 8ம் தேதி நடைபெறும் பாரத் பந்திற்கு காங்கிரஸ் கட்சி தமது முழு மனதுடன் ஆதரவளிக்கும் என்பதை அறிவிக்கிறேன்.

அன்றைய தினம் விவசாயிகளுக்கு ஆதரவையும், ஒற்றுமையையும் உணர்த்தும் வகையில் அனைத்து மாநில மற்றும் மாவட்டங்களில் கட்சி அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெறும் என்று கூறினார்.

முன்னதாக இந்த பாரத் பந்த் போராட்டத்துக்கு தெலுங்கானா முதலமைச்சரும், தமிழகத்தில் திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன.