அமேதி: உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியின் காங்கிரஸ் அலுவலகத்தில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களை அடித்து நொறுக்கி உள்ளனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலை பாஜக குண்டர்கள் நடத்தியுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், அமேதியில் காங்கிரஸ் கட்சி சார்பில், வேட்பாளர் கே.எல்.சர்மா போட்டியிடுகிறார். அங்கு பாஜக சார்பில், மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணியும் போட்யிடுகிறார். இந்த நிலையில், அங்குள்ள   காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று இரவு மர்ம நபர்கள் புகுந்து தாக்குல் நடத்தினர். மேலும், தாக்குதல்காரர்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 12-க்கும் மேற்பட்ட கார்களை அடித்து நொறுக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த தாக்குதல்  குறித்து, காங்கிரஸ் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதற்கிடையே, பாஜகவை சேர்ந்த குண்டர்கள் தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேலும், காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு அதன் துண்டுகள் தரையில் சிதறிக் கிடப்பதைக் காட்டும் வீடியோவை காங்கிரஸ் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அமேதியில் ஸ்மிருதி இரானியின் (பாஜக வேட்பாளர்), தோல்வி பயத்தில் பாஜகவினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர சுப்ரியா ஸ்ரீனேட்  தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ’அமேதியில் காங்கிரஸ் அலுவலகத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. போலீஸார் அமைதியான பார்வையாளர்களாக இருந்தனர். பாஜகவினர் தங்கள் போக்கிரித்தனத்தை தொடர்ந்தனர். சூழல் மாறிவிட்டது, வாகனங்களை உடைப்பது பிரச்சினைக்கு தீர்வு தராது பாஜக மக்களே’ என தெரிவித்துள்ளார்.

 காங்கிரஸ் அலுவலகத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அமேதி, ரேபரேலி தொகுகிகளில், 5வது கட்ட தேர்தலின்போது,  வரும் 20ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.