சாதி கலவரத்தை தூண்டும் வகையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருவதாக சென்னை, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகை கஸ்தூரி,  சமீபகாலமாக அரசியல் மற்றும் பொது நிகழ்வுகள் குறித்து தனது கருத்துக்களை பதிவிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார். அவரது பதிவுகளுக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துவருகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் இட்ட பதிவு ஒன்று குறிப்பிட்ட சமுதாயத்தினரை சாடுவதாக இருந்தது என்று சர்ச்சை எழுந்தது.  அப்போது, தனக்கு சிலர் போன் செய்து மிரட்டுவதாக  கஸ்தூரி புகார் கூறியிருந்தார்.

இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை கஸ்தூரி மீது, சமூக நீதி சத்ரிய பேரவையின் தலைவர் பொன்குமார் புகார் அளித்துள்ளார்.  அதில், நடிகை கஸ்தூரி, சாதி கலவரத்தை தூண்டும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிடுவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  தெரிவித்துள்ளார்.