சென்னை: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலை கொடுப்பது சம்பந்தமாக மாநில அரசு ஆலோசித்து வருவதாக,  ‘பிங்க் அக்டோபர்’ நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உலக மார்பகப் புற்றுநோய் வாரத்தை முன்னிட்டு அக்டோபர் முழுவதும் ‘பிங்க் அக்டோபர்’ என்ற முகாம்கள் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் நடைபெற உள்ளது. இதையொட்டி சென்னை   கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று மாபெரும் மார்பக பரிசோதனை முகாம் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது,

உலக மார்பகப் புற்றுநோய் வாரத்தை முன்னிட்டு அக்டோபர் முழுவதும் ‘பிங்க் அக்டோபர்’ என்ற முகாம்கள் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் நடைபெறுகிறது.  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 60 வயதை கடந்த சிகிச்சைக்காக வருபவர்களுக்கு புற்றுநோய் தொடர்பான பரிசோதனை செய்யும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே பட்ஜெட் கூட்டத்தொடரில்,  புற்றுநோய்க்கு மிக முக்கியத்துவம் கொடுத்து புற்றுநோயை உற்று நோக்குவோம் என்ற அறிவிப்பு 110 விதியின் கீழ் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும்,  வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் தமிழகம் முலுவதும் 1250 மருத்துவ முகாம்கள்  நடைபெற உள்ளது. அங்கு புற்றுநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்படும். கீழ்பாக்கம் மருத்துவமனையில் நவீன கருவிகள் மூலம் மிக சிறப்பாக புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

செய்தியாளர்கள் கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தவர்,  வரும் ஞாயிற்றுக்கிழமை 4 வது மெகா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால், அன்றைய தினம் கிராமசபை கூட்டம் நடைபெறுவதால், அன்று நடத்த முடியாத நிலை உள்ளது.

செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 1,42,60000 கோடி தடுப்பூசிகள் தமிழ்நாட்டில் போடப்பட்டுள்ளது. இந்த மாதம் செலுத்துவதற்கு கூடுதல் தடுப்பூசிகளை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். தற்போதைய நிலையில்,  தமிழக அரசிடம்  24,98,365 லட்சம் தடுப்பூசிகள்  கையிருப்பில் உள்ளன. மேலும், 1,23,9370 தடுப்பூசிகள் மத்திய அரசு நமது மாநிலத்திற்கு வழங்க உள்ளது.  அதில்,  8 லட்சம் தடுப்பூசிகள் இன்று மாலை வர உள்ளது.

இந்த தடுப்பூசிகளை கொண்டு,  தேனி திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் போட முடியுமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார்.

கோவாக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாமல் காத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும், உடனே அரசு தடுப்பூசி மையங்களுக்கு  கோவாக்சின் தடுப்பூசியை வந்து செலுத்தி கொள்ள வேண்டும். தடுப்பூசிக்காக யாரும் காத்திருக்க வேண்டாம் தாராளமாக வந்து போட்டுக் கொள்ளலாம் என்றார்.

60 வயதை தாண்டியவர்கள் சர்க்கரை மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் பயன் அடைகின்றனர் ஆயினும் அவர்கள் தடுப்பூசி போடாமல் இருந்தால் அவர்கள் தடுப்பூசி கட்டாயம் செலுத்தி கொள்ள வேண்டும் என கூறினார்.

கொரோனா நோய்தொற்றில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குவது குறித்து முதல்வரிடம்  ஆலோசனை நடத்தி பணி வழங்குவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.