சென்னை:  வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை  விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்ட வரும் சனிக்கிழமை சென்னையில் உள்ள அனைத்து வகை உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செய்லபடும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தொடர் பெருமழையின் காரணமாக சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்பணி நாட்களை ஈடு செய்திடும் வகையில் 03.12.2022 அன்று சனிக்கிழமை சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் திங்கள்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும் என்று அறிவிக்கப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்தது. நவம்பர் 1ம் தேதி முதல் நவம்பர் 4-ம் தேதி வரை மழை தீவிரமாக இருக்கும் என்றும் வடதமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.