கோவை: தைப்பூச திருவிழாவையொட்டி, கோவையில் இருந்து பழனிக்கு 29ந்தேதி முதல் 5 நாட்கள் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

2023 ம் ஆண்டில் தைப்பூச விழாவான பிப்ரவரி 05 ம் தேதி வருகிறது. முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றான பழனியில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடந்து முடிந்த சில நாட்களிலேயே தைப்பூச விழாவும் வருவதால், பழனி மலையில் முருகப் பெருமானை காண ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பழனி, திருச்செந்தூர் உள்பட பல முருகன் கோவில்களுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கானோர் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,  தைப்பூசத்தை முன்னிட்டு கோவையில் இருந்து பழனிக்கு 5 நாட்கள் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என மதுரை மதுரை கோட்ட ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

பயணிகளின் வசதிக்காக திண்டுக்கல்-கோவை இடையே பொதுப்பெட்டிகளை கொண்ட  சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

அதுபோல கோவையில் இருந்தும் பழனிக்கு பொதுப்பெட்டிகளை கொண்ட சிறப்பு ரெயில் (வ.எண்.06077)  , 29-ந் தேதி, வருகிற 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.

இந்த சிறப்பு ரயில் கோவையில் இருந்து காலை 9.20 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு திண்டுக்கல் வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் (வ.எண்.06078) திண்டுக்கல்லில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு கோவை சென்றடைகிறது.

இந்த ரெயில்கள், போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலைப்பேட்டை, மைவாடி ரோடு, மடத்துக்குளம், புஷ்பத்தூர், பழனி, சத்திரப்பட்டி, ஒட்டன் சத்திரம், அக்கரைப்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரெயிலில் மதுரை வர விரும்பும் பயணிகள் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 1.25 மணிக்கு கோவை-நாகர்கோவில் செல்லும் ரெயிலில் ஏறி மதுரை வந்தடையலாம்.

பழனி செல்ல விரும்பும் மதுரை பயணிகள் நாகர்கோவில்-கோவை செல்லும் ரெயிலில் மதுரையில் இருந்து 12 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.20 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையம் சென்றடையும் வசதி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.