பொள்ளாச்சி: 
பொள்ளாச்சி அருகே 17 வயது சிறுவனை, கட்டாயப்படுத்தி திருமணம் செய்த 19 வயது இளம்பெண் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
பொள்ளாச்சி பகுதியில் 19 வயது இளம்பெண் தனியார் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார்.  இந்த பெண்ணுக்கு அந்த பங்கிற்கு அடிக்கடி பெட்ரோல் நிரப்ப வந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுவனை 19 வயது இளம்பெண் காதலிப்பதாகக் கூறி கடந்த சில தினங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதுபற்றி சிறுவனின் பெற்றோர்களுக்கு தகவல் தெரியவந்ததால் சிறுவனின் பெற்றோர் புகார் அளித்ததின் பேரில் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
கடந்த சில தினங்கள் முன்பு சிறுவனுக்கு ஹிரன்யா அறுவை சிகிச்சை செய்வதற்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுவனைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்ற பெண் சிறுவனிடம் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறி பொள்ளாச்சி பகுதியில் உள்ள கோவிலுக்கு அழைத்துச்சென்று கட்டாய திருமணம் செய்து உள்ளார்.
இதனால்,  அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததனர்.புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பொள்ளாச்சி மகளிர் காவல் நிலைய காவல்துறையினர்   19 வயது இளம்பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து,  கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர்.