கோயமுத்தூர்: கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக  என்ஐஏ-க்கு உதவியாக 14 போலீசார் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. என்ஐஏ அமைப்பினர் தற்போது கோவை காவலர் மைதானத்தில் அலுவலகம் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தீபாவளிக்கு முந்தைய நாளான,  கடந்த 23-ந்தேதி அதிகாலை 4.10 மணியளவில் கோவை உக்கடம் அருகே உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு பயங்கர  கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த கார் குண்டு விபத்தில், அதே காரில் இருந்த ஜமேஷா முபின் (வயது 28 )என்பவர் உயிரிழந்தார். இவர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர போலீசாரால் அமைக்கப்பட்ட 9 தனிப்படை போலீசார் புலன் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வெடிகுண்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கேரளா உள்பட இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு குற்றவாளிகளுடன் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. தென் மண்டலங்களுக்கான டி.ஐ.ஜி.வந்தனா தலைமையிலான அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு போலீசாருடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை கார் வெடிப்பு தொடர்பாக, தேசிய புலனாய்வு அமைப்பு நேரடி விசாரணையை நேற்று தொடங்கிய நிலையில், என்.ஐ.ஏ விசாரணைக்கு உறுதுணையாக, கோவை மாநகர காவல் துறை சார்பில், இரண்டு இன்ஸ்பெக்டர்கள், 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 8 காவலர்கள் உள்ளிட்ட 14 போலீசார் கொண்ட தமிழக காவல்துறை கொண்ட குழு வழங்கபட்டுள்ளது. இந்த குழுவினர், விசாரணை நிறைவடையும் வரை, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.