சென்னை: தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதான 6 பேரையும் வரும் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த அக்டோபர் மாதம் 23ம் தேதியன்று கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக  அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் காரில் இருந்த நபரரான ஜமேஷா முபீன் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் சிதறியதாக கூறப்பட்டது. பின்னர் அதில் கிடைக்கப்பெற்ற தடங்கள் மூலம் அது கார் குண்டு வெடிப்பு என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த வெடிகுண்டு வழக்கை என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. கார் வெடிப்பில் உயிரிழந்த நபர்,  உக்கடம் ஜி.என். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், 2019 ம் ஆண்டில் இவரிடம் தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் அவரிடம் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் 75 கிலோ வெடி மருந்துகளை கைப்பற்றினர். இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை உக்கடம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் முபினக்கு ஆதரவாக செயல்பட்ட மேலும் 5 பேர்  கைது செய்யப்பட்டனர். அவர்கள்மீது உபா சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

விசாரணையில், ஆன்லைனில் வெடி மருந்துகளை வாங்கிக் கொடுத்ததாக கோவை வின்செண்ட் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த ஜமேசா முபினின் உறவினரான அப்சர்கான் (28) என்பரிடம் காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. மேலும் கோவையில் சில இடங்கள் உள்பட மாநிலம் முழுவதும் குண்டுவெடிப்பு நடத்த அவர்கள் திட்டமிட்டு வந்த சதி செயல் தெரிய வந்துள்ளது. மேலும், அவர்கள் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் என்பதும் அவர் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மூலம் உறுதியானது.

இந்த நிலையில், கோவை  கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரும் கோவை சிறையில் இருந்து, சென்னை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். கோவை சிறையில் இருந்த 6 பேரும் பாதுகாப்புடன் சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து செல்லப்பட்டனர். 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரணை செய்ய என்.ஐ.ஏ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, கோவை சிறையில் இருந்த 6 பேரும், இன்று சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில், 6 பேரையும் வரும் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.